லண்டன்: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் மாதம் 11ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ள இந்த இறுதிப் போட்டி லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
முன்னதாக இந்த இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த லார்ட்ஸ் மைதான நிர்வாகம், போட்டிக்கான டிக்கெட் விலையை சுமார் 50 பவுண்ட் அளவுக்கு அதிகரித்து வைத்திருந்தது. அதனால் கூடுதலாக நான்கு மில்லியன் பவுண்ட், அதாவது 45 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம் என திட்டமிட்டு இருந்தது.

ஆனால், இந்திய அணி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை. தற்போது ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இந்த இறுதிப் போட்டியில் மோத உள்ளன. அதனால், அதிக விலைக்கு டிக்கெட் விற்றால் இருக்கைகளை நிரப்ப முடியாது என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில், இந்திய ரசிகர்கள் கூடுதல் விலை கொடுத்தாவது டிக்கெட் வாங்குவதற்கு ஆர்வத்துடன் இருப்பார்கள். இருக்கைகளின் எண்ணிக்கையை விட பல மடங்கு கூடுதலாக டிக்கெட் வாங்க போட்டி நிலவும். ஆனால், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதிப் போட்டியை பார்ப்பதற்கு பெரிய அளவில் ஆர்வம் இல்லை.
எனவே, கூடுதல் விலைக்கு டிக்கெட்களை விற்றால் பாதி அளவு டிக்கெட்டுகள் கூட விற்பனையாகாது, மைதானம் காலியாக காட்சியளிக்கும். எனவே, மைதானத்தை நிரப்புவதற்காக வழக்கமான டிக்கெட் விலையை நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது லார்ட்ஸ் மைதான நிர்வாகம்.
இதனால் இந்தியா விளையாடும் என்று எதிர்பார்ப்பில் 4 மில்லியன் பவுண்டு லாபம் சம்பாதிக்கலாம் என கனவு கண்ட லார்ட்ஸ் கிரிக்கெட் மைதான நிர்வாகத்திற்கு தற்போது 45 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட்டின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.
சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது போட்டிகள் அனைத்தையும் துபாயில் விளையாடியது குறித்து முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் விமர்சனம் செய்திருந்தனர். அது இந்திய அணிக்கு சாதகம் எனவும் சுட்டிக்காட்டி இருந்தனர். ஆனால், இந்தியா பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்து சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகி இருந்தால் அந்த தொடரே நடந்திருக்காது அல்லது மிகப் பெரிய இழப்பை சந்தித்து இருக்கும்.
இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்தாலும் துபாயில் விளையாடியதால் தான் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி அந்தத் தொடரில் நடைபெற்றதால்தான் பெருமளவு லாபம் ஈட்ட முடிந்தது. அதைத்தான் லார்ட்ஸ் மைதான டிக்கெட் விலை விவகாரமும் சுட்டிக்காட்டுகிறது.