டல்லாஸ்: நியூ யார்க் அணிக்கு எதிரான போட்டியில் லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணி வெறும் 50 ரன்களுக்கு ஆல் அவுட்டாகிய சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2017ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி வெறும் 49 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்த சம்பவம் இன்று வரையிலும் ஆர்சிபி ரசிகர்கள் மத்தியில் தலைகுனிவை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு முறை எந்த அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், 49 ரன்களை கடக்க வேண்டும் என்ற வேண்டி வருகின்றனர். அப்படியான சம்பவத்தை செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 50 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் எம்ஐ நியூ யார்க் அணியை எதிர்த்து லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய எம்ஐ நியூ யார்க் அணி 54 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது வந்த பூரன் 37 ரன்கள் அடித்து அசத்தினார். ஆனால் கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய டிம் டேவிட் 21 பந்துகளில் 4 சிக்சர், 4 பவுண்டரி உட்பட 48 ரன்களை விளாசினார்.
இதன் மூலம் எம்ஐ நியூ யார்க் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 156 ரன்கள் என்ற இலக்குடன் லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. ஆனால் மும்பை அணியின் பந்துவீச்சாளர்களான ரபாடா, பொல்லார்ட், இஷான் அடில், போல்ட் ஆகியோரின் வேகத்தில் எதிரணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியின் உன்முக்த் சந்த் மட்டும் 26 ரன்கள் எடுத்தார்.
இவரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். அதில் 4 பேட்ஸ்மேன்கள் டக் அவுட்டில் வெளியேறினர். இதன் மூலம் எம்ஐ நியூ யார்க் அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்த ஆட்டத்தையடுத்து ஆர்சிபி ரசிகர்கள் கொல்கத்தா அணி ரசிகர்களை கிண்டல் செய்து வருகின்றனர்.