கொழும்பு : இலங்கை பிரீமியர் லீக் தொடரில் பாம்புகளின் அட்டகாசம் தாங்க முடியாத அளவுக்கு இருக்கிறது. பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப பாம்பைக் கண்டு கிரிக்கெட் போட்டியே நிறுத்தப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக கொழும்பு நகரில் உள்ள பிரேமதேச மைதானத்தில் தொடர்ந்து இரண்டு முறை பாம்புகள் மைதானத்திற்குள் ஊடுருவியதால் வீரர்களின் பாதுகாப்பும் ரசிகர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.

ஏற்கனவே இரண்டு வாரத்திற்கு முன்பு பாம்பு மைதானத்திற்குள் வந்ததால் போட்டி தடைப்பட்டது. இந்த நிலையில் கொழும்புவில் நடைபெற்ற கேண்டி மற்றும் ஜாப்னா கிங்ஸ் இடையிலான ஆட்டத்தில் மீண்டும் பாம்பு மைதானத்திற்குள் வந்தது. கேண்டி அணி 178 ரன்களை அடித்திருந்தது. 179 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜாப்னா கிங்ஸ் அணி விளையாடுகிறது.
அப்போது 17.1 வது ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் என்ற நிலையில் ஜாஃப்னா அணி இருந்தது. அப்போதுதான் பாம்பு மைதானத்திற்குள் உள்ளே புகுந்தது. இதனை கவனிக்காத இலங்கை வீரர் இஸ்ரு உதானா, ஃபீலிங் செய்வதற்காக பின்னாலே நடந்து வந்தார். அப்போது அவருக்கு அருகே பாம்பு வளைந்து நெளிந்து போனது. இதனை கொஞ்சமும் பார்க்காத உதானா, அவர் பாம்பு மீது காலை எடுத்து வைக்கப் போனார்.
அப்போது திடீரென சுதாரித்துக் கொண்ட அவர் அங்கு பாம்பு சென்றதைப் பார்த்து பயந்து அப்படியே உறைந்தார். இதனை அடுத்து பாம்பு அங்கிருந்து கேமராமேன் இருக்கும் இடத்திற்குச் சென்றது அங்குள்ள ஒயர்களில் பாம்பு ஊர்ந்து சென்றது.இதனை பார்த்த கேமராமேன்களும் பயந்து அங்கிருந்து ஓடினர். இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது.தொடர்ந்து இரண்டு முறை பாம்பு அங்கு வந்திருப்பதால் பார்வையாளர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.
தற்போது ஆசிய கோப்பை தொடரும் நடைபெற உள்ள நிலையில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். அப்போது இதுபோல் பாம்பு வந்தால் வீரர்களின் பாதுகாப்பு என்ன ஆகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் அங்கு சுற்றித் திரியும் பாம்புகளைப் பிடிக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.