மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளராக கம்பீர் பதவி ஏற்ற நிலையில் தற்போது கிரிக்கெட்டில் பல மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. கம்பீர் தமக்கு வேகபந்துவீச்சாளராக வினய் குமார் வேண்டும் என முதலில் கேட்டார். அதற்கு பிசிசிஐ ஒப்புக்கொள்ளவில்லை.
அதன் பிறகு ஜாகிர் கானை வேண்டுமென்றால் பந்துவீச்சு பயிற்சியாளராக வைத்துக் கொள்ளுங்கள் என பிசிசிஐ நிர்வாகிகள் கூறியிருந்தனர். இதற்கு கம்பீர் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக தமக்கு வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளரான தென்னாப்பிரிக்காவை சேர்ந்த மோர்னே மோர்க்கல் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்.

மோர்னே மோர்க்கல் விளையாடிய காலத்தில் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தார் இதனால் கம்பீர பேச்சைக் கேட்டு அவருக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் கம்பீர் கடந்த ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் லக்னோ அணியிலிருந்து கொல்கத்தா அணிக்கு சென்றார். இதனால் லக்னோ அணியில் மென்டர் என்ற பொறுப்புக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை.
இந்த சூழலில் ஜாகிர் கான் அந்த இடத்திற்கு வர போகிறார் என்ற செய்தி வெளியானது. ஆனால் அது வதந்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது லக்னோ அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை ஒரு சிறிய நிகழ்ச்சி மூலம் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அறிவித்தார். அப்போது ஜாகிர் கான் அருகில் இருந்தார்.
லக்னோ அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் கூடுதல் பயிற்சியாளர்களாக லேன்ஸ் குலுஸ்னர், ஆடம் வொக்ஸ் மற்றும் ஜான் டீ ரூட்ஸ் போன்ற வீரர்கள் உள்ள நிலையில் தற்போது மெண்டர் பணிக்காக ஜாஹீர் கான் இணைந்து இருக்கிறார். ஜாகிர் கான் நியமனம் குறித்து பேசிய அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, நான் ஜாகிர் கான் மும்பை அணியில் இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
சில நாட்களுக்கு முன்பு தான் தெரியும் அவர் மும்பை அணியில் இருந்து விலகி விட்டார் என்று தெரிந்தவுடன் உடனடியாக நான் அவரை தொடர்பு கொண்டு லக்னோ அணிக்கு வாருங்கள் என்று கூறினேன். அவரும் ஓகே என்று வந்துவிட்டார். இது ஒரு சிம்பிளாக நடந்து விட்டது. ஜாகிர் கான் யுக்திகளில் வல்லவர்.
கிரிக்கெட் களத்தில் நல்ல மதிப்பு உடைய பவுலராக இருக்கிறார். அவர் தெளிவான சிந்தனை உடையவர். அவருடைய வருகை லக்னோ அணியின் பலத்தை அதிகரிக்கும் என்று நான் நினைக்கிறேன் என சஞ்சீவ் கோயங்கா கூறியுள்ளார். லக்னோ அணி கடந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு செல்லவில்லை. கம்பீர் விலகிய நிலையில் லக்னோ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்க்கல் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மோர்க்கலும் கம்பீர உடன் சென்றுள்ளதால் தான் ஜாகிர் கான் மெண்டர் பணிக்கு வந்திருக்கிறார். இதனால் ஜாகிர் கான் வீரர்களுக்கு பந்துவீச்சு பயிற்சியும் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாகிர் கான் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய பொறுப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 22 ஆம் ஆண்டு வரை செயல்பட்டார்.
ஜாகிர் கான் இந்திய அணிக்காக 92 டெஸ்ட், 200 ஒருநாள் மற்றும் 17 t20 போட்டிகள் மற்றும் 100 ஐ பி எல் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ஜாகிர் கான் டெல்லி, பெங்களூரு, மும்பை அணிக்காகவும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கிறார். ஜாகிர் கான் கடைசியாக 2017 ஆம் ஆண்டு தான் ஐபிஎல் தொடரில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.