லக்னோ: 2025 ஐபிஎல் தொடரில் தொடர்ந்து தலைப்புச் செய்தியாகப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) அணியின் சுழற்பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதி (Digvesh Rathi), உள்ளூர் டி20 தொடர் ஒன்றில் ஒரே ஓவரில் ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி மிரட்டி இருக்கிறார்.
இதை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நிர்வாகம் வீடியோவாக வெளியிட்டு அவரைப் பாராட்டி இருக்கிறது. வரிசையாக 5 பந்துகளில் 5 விக்கெட்களை வீழ்த்தி அவர் மிரட்டி இருக்கிறார். இந்தப் போட்டியில் மட்டும் அவர் ஏழு விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

இந்தத் தொடர் எங்கு நடக்கிறது, அதன் பெயர் என்ன என்பது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், திக்வேஷ் ரதி சிறப்பாக செயல்பட்ட வீடியோ மட்டும் வெளியாகி உள்ளது. அதையும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெளியிட்டுள்ளது.
திக்வேஷ் ரதி 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக பெரும்பாலான போட்டிகளில் விளையாடினார். அவர் 13 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். மேலும் அவர் விக்கெட்டுகளை வீழ்த்திய போது, அதை கொண்டாடிய விதம் சர்ச்சையாக மாறியிருந்தது.
எதிரணி பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்து வெளியேறும் போது, அவர்கள் முகத்துக்கு நேராகச் சென்று ஒரு புத்தகத்தை எடுத்து அதில் அவர்களது பெயரை குறித்து வைத்துக் கொள்வது போல அவர் சைகைகளை செய்தார். அது சர்ச்சையாக மாறியது.
முதல் முறை செய்த போது அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அப்படியிருந்தும் இரண்டாவது முறை செய்ததால், இரண்டாவது முறையாக அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்து அவர் பேட்ஸ்மேன்களின் முகத்துக்கு நேராக அதை செய்யாமல், சற்று தூரம் தள்ளி நின்று அந்தக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். என்ன நடந்தாலும் அந்தக் கொண்டாட்டத்தை விடுவதில்லை என்பதில் தீவிரமாக இருந்தார்.
ஒரு கட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா ஆட்டமிழந்து வெளியேறிய போதும் அதேபோல அவர் செய்தார். அப்போது அபிஷேக் ஷர்மா அவருடன் மோதலில் ஈடுபட்டார். இதை அடுத்து திக்வேஷ் ரதிக்கு ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் உள்ளூர் போட்டிகளில் மிக சிறப்பாக செயல்பட்டு தொடர்ந்து 5 பந்துகளில் 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார்.