மும்பை: 2022ஆம் ஆண்டு லக்னோ அணியை ரூ.7,090 கோடிக்கு வாங்குவதற்கு டெண்டர் கோரியதால், என்னை அனைவரும் பைத்தியக்காரன் என்று நினைத்ததாக அந்த அணியின் உரிமையாளர் சஞ்வீவ் கொயங்கா தெரிவித்துள்ளார். தற்போது அந்த அணியின் மதிப்பு ரூ.13,147 கோடி என்று கூறிய சஞ்சீவ் கொயங்கா, அடுத்ததாக ஹண்ட்ரட் லீக் தொடரின் மதிப்பும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணியை சூப்பர் ஜெயிண்ட்ஸ் குரூப் ரூ.7,090 கோடிக்கு வாங்கியது. அப்போது குஜராத் அணியை சிவிசி கேபிடல் நிறுவனம் ரூ.5,625 கோடிக்கு வாங்கி இருந்தது. சுமார் ரூ.1,500 கோடி கூடுதலாக சூப்பர் ஜெயிண்ட்ஸ் நிறுவனம் செலவு செய்ததாக பலரும் விமர்சித்ததோடு கிண்டல் செய்தனர். அதன்பின் லக்னோ அணி 4 சீசன்களில் விளையாடி இருக்கிறது.

இந்த 4 சீசன்களில் லக்னோ அணி 2 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. ஆனால் கடந்த 2 சீசன்களாக லக்னோ அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் லக்னோ அணியின் நிர்வாகிகளை தொடர்ச்சியாக மாற்றி வருகிறார் சஞ்சீவ் கொயங்கா. சஞ்சீவ் கொயங்காவின் செயல்பாடுகளும் ரசிகர்களிடையே கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே சூப்பர் ஜெயிண்ட்ஸ் நிறுவனம் எஸ்ஏ20 லீக் தொடரின் டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியையும், ஹண்ட்ரட் லீக் தொடரில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியையும் வாங்கி இருக்கிறது. இதன் மூலமாக சூப்பர் ஜெயிண்ட்ஸ் குரூப் விளையாட்டில் அதிகளவு முதலீடு செய்து வருகிறது. இந்த நிலையில் சஞ்சீவ் கொயங்கா கொடுத்த நேர்காணல் ஒன்று ட்ரெண்டாகி வருகிறது.
அதில் சஞ்சீவ் கொயங்கா பேசுகையில், ஐபிஎல் தொடரில் ஒரு அணியை வாங்குவதற்காக ரூ.7,090 கோடி முதலீடு செய்த போது, மொத்த உலகமும் என்னை பைத்தியக்காரன் என்று நினைத்தது. ஆனால் இந்த மூன்றரை ஆண்டுகளில் லக்னோ அணியின் மதிப்பு ரூ.13,147 கோடியாக உயர்ந்துள்ளது. உலகில் ஐபிஎல் தொடரை போல் வேறு எந்த லீக் தொடரும் நடப்பதில்லை.
ஐபிஎல் தொடர் இந்த இடத்தை எட்டுவதற்கு 18 ஆண்டுகள் ஆகி இருக்கிறது. அதுபோல் ஹண்ட்ரட் லீக் தொடரும் வளர்ச்சி பெறும் என்று தெரிவித்துள்ளார். 4 ஆண்டுகளில் லக்னோ அணியின் மதிப்பு சுமார் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் உயர்ந்திருப்பது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.