லக்னோ: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் , தங்களது அணியில் உள்ள காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர்களான ஆவேஷ் கான், மொஹ்சின் கான், நமன் திவாரி ஆகியோரை தென்னாப்பிரிக்காவின் டர்பனுக்கு அனுப்பவுள்ளது. லக்னோ அணி நிர்வாகம் வாங்கிய டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஊழியர்களுடன் இவர்கள் இணைந்து பயிற்சி பெற உள்ளனர்.
ஐபிஎல் 2026 சீசன் மார்ச் 26 அன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 2026 போட்டிக்கு முன் முழு உடற்தகுதி பெறுவதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். அதன் படி, இந்த வீரர்கள் அடுத்த வாரம் தென்னாப்பிரிக்கா செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டர்பன் அணியின் ஊழியர்களில் லக்னோவின் பயிற்சி குழுவில் உள்ள டாம் மூடி, பாரத் அருண், கார்ல் க்ரோவ் போன்றோர் இடம்பெற்றுள்ளனர்.

டிசம்பர் 26 அன்று SA20 தொடங்கும் நிலையில், இந்த வீரர்களை தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்ப அந்த அணி நிர்வாகம் பிசிசிஐயிடம் அனுமதி கோரியது. பிசிசிஐ ஒப்பதலுக்கு பிறகு இந்த பயணம் நடைபெறுகிறது.ஆவேஷ் மற்றும் மொஹ்சின் இருவரும் லக்னோவின் மிக முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஆவார்கள்.
கடந்த சீசனில் காயத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டதால், அது லக்னோவின் திட்டங்ளை வெகுவாகப் பாதித்தது. மீண்டும் இத்தகைய பின்னடைவுகளை அணியால் தாங்க முடியாது என்பதால், உடற்தகுதிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில், அந்த வீரர்கள் வலைப்பயிற்சியில் கூட டர்பன் அணிக்காக பயன்படுத்தலாம். இது ஒரே கல்லில் 2 மாங்காக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 2026 ஏலத்தில் லக்னோ அணி, வனிந்து ஹசரங்கா, அன்ரிச் நோர்டியே (தலா ₹2 கோடி), முகுல் சௌத்ரி (₹2.6 கோடி), நமன் திவாரி (₹1 கோடி), அக்ஷத் ரகுவன்ஷி (₹2.2 கோடி) மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் (₹8.6 கோடி) ஆகியோரை ஒப்பந்தம் செய்தது. இந்த வீரர்கள் அணிக்கு மேலும் பலம் சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், அணியிலுள்ள அன்ரிச் நோர்டியே மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெரிதாக விளையாடாத மாயங்க் யாதவ் போன்ற பல வீரர்கள் அடிக்கடி காயமடையக்கூடியவர்களாக உள்ளனர். மாயங்க் இன்னும் முழு உடல் தகுதியை பெறவில்லை. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையிலும், காயமடைந்த முக்கிய வீரர்களை முழு உடற்தகுதிக்கு கொண்டுவரும் லக்னோவின் இந்த முயற்சி அணிக்கு மிக அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.