லக்னோ: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் அதிரடி தொடக்க வீரர் எய்டன் மார்க்ரம் 30 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். கடைசியாக ஆடிய 6 இன்னிங்ஸில் மார்க்ரம் அடிக்கும் 4வது அரைசதம் இதுவாகும். கிளாசிக் ஆட்டத்தின் மூலமாக மார்க்ரம் ரன்களை குவித்து வருவதால், ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் 40வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் லக்னோ அணி தரப்பில் மிட்சல் மார்ஷ் - எய்டன் மார்க்ரம் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இருவருமே ஸ்பின்னர்களுக்கு திணறுவார்கள் என்பதால், அக்சர் படேல் அட்டாக்கில் வந்தார்.

இதனால் லக்னோ அணியின் மார்க்ரம் - மார்ஷ் கூட்டணி நிதானமாக ரன்களை சேர்த்தது. அக்சர் படேலை கவனமாக எதிர்கொண்ட இருவரும், வேகப்பந்துவீச்சாளர்களை விளாசி தள்ளினர். மிட்சல் ஸ்டார்க் பவுலிங்கில் மார்க்ரம் சிக்ஸ் அடிக்க, முகேஷ் குமார் பவுலிங்கில் சிக்ஸ் மற்றும் பவுண்டரியும் அடிக்கப்பட்டது. சிறப்பாக ஆடியதால் லக்னோ அணியின் ஸ்கோர் பவர்பிளே முடிவில் 51 ரன்களை விளாசியது.
இதனைத் தொடர்ந்து மிட்சல் மார்ஷ் அட்டாக் செய்ய முடியாமல் தவித்த நிலையில், மொத்த பொறுப்பையும் மார்க்ரம் எடுத்து கொண்டு பவுலர்களை வெளுத்து கட்டினார். சிறப்பாக ஆடிய எய்டன் மார்க்ரம் 30 பந்துகளில் அரைசதத்தை விளாசினார். மார்க்ரமின் அதிரடியான ஆட்டத்தால் லக்னோ அணி 10 ஓவர்களில் 87 ரன்களை எடுத்தது.
அப்போது மார்க்ரம் 33 பந்துகளில் 3 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 52 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இந்த அரைசதம் மூலமாக கடைசியாக 6 இன்னிங்ஸில் மார்க்ரம் தனது 4வது அரைசதத்தை விளாசி இருக்கிறார். இந்த 6 இன்னிங்ஸில் ஒரேயொரு முறை மட்டுமே ஒற்றை இலக்கத்தில் மார்க்ரம் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.
ஹர்திக் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் போல் அல்லாமல் தனது கிளாசிக் ஷாட்கள் மூலமாக மார்க்ரம் ஐபிஎல் தொடரில் அசத்தி வருவது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த சீசனில் மட்டும் 9 இன்னிங்ஸில் ஆடியுள்ள எய்டன் மார்க்ரம் 326 ரன்களை விளாசி இருக்கிறார். இதன் மூலமாக ஆரஞ்ச் கேப் பட்டியலில் மார்க்ரம் 6வது இடத்தில் இருக்கிறார்.