லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இந்த இரு அணிகளுக்கு இடையிலான முந்தைய போட்டியில் டெல்லி அணி வென்ற நிலையில், இம்முறை லக்னோ அணி பதிலடி கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் லக்னோ அணிக்காக மயங்க் யாதவ் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 40வது லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து டெல்லி அணி களமிறங்கி இருக்கிறது. கடந்த சீசனில் ரிஷப் பண்ட் டெல்லி அணிக்காகவும், கேஎல் ராகுல் லக்னோ அணிக்காகவும் விளையாடினர். இருவருமே அந்தந்த அணிகளின் உரிமையாளர்களுடனான மோதல் காரணமாக விலகினர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேரடியாக மோதி இருக்கின்றனர்.

இதற்கு முன்பாக நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் அஷுதோஷ் சர்மாவின் அபார ஆட்டத்தால் வெற்றிபெற்றது. இதற்கு லக்னோ அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லக்னோ மைதானத்தில் இந்த போட்டி நடப்பதால், அந்த அணிக்கு கூடுதல் சாதகம் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதன்பின் அக்சர் படேல் பேசுகையில், ரெட் சாயில் விக்கெட். கடந்த போட்டியின் போது பிட்சில் பனிப்பொழிவு இருந்தது. நாங்கள் எங்கு சரியாக செயல்பட்டுள்ளோம், எங்கு தவறு செய்துள்ளோம் என்று பார்கிறோம். மற்றபடி பெரிதாக கவலைக் கொள்வதில்லை.
இந்த போட்டியில் மோகித் சர்மாவுக்கு பதிலாக சமீரா வந்துள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேசுகையில், டாஸ் வென்றிருந்தால் நாங்கள் பவுலிங்கையே தேர்வு செய்திருப்போம். முதல் பேட்டிங்கின் போது பந்து கொஞ்சம் நின்று வரும். சில ஓவர்களுக்கு பின்னரே பேட்ஸ்மேன்களுக்கு சாதகம் கிடைக்கும்.
முதல் சில ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை விடக் கூடாது. எனது கைகள் நன்றாக இருக்கிறது. எங்களை சுற்றி எப்போதும் என்ன நடக்கிறது என்பதை பற்றி கவலைப்பட மாட்டோம். இந்த போட்டியில் எங்கள் அணியில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் லக்னோ அணிக்காக மயங்க் யாதவின் பெயர் இம்பேக்ட் பிளேயர் பட்டியலில் இருப்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.