லக்னோ: ஐபிஎல் தொடரில் குறைந்த இன்னிங்ஸ்களில் 5 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை டெல்லி அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் படைத்துள்ளார். லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 42 பந்துகளுக்கு 57 ரன்களை விளாசியதன் மூலமாக இந்த சாதனையை கேஎல் ராகுல் செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது. இதன்பின் களமிறங்கிய டெல்லி அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் 42 பந்துகளில் 57 ரன்களை விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். இந்த ஆட்டத்தில் 51 ரன்களை எடுத்த போது, கேஎல் ராகுல் முக்கிய சாதனை ஒன்றை படைத்தார். அதாவது, ஐபிஎல் தொடரில் குறைந்த இன்னிங்ஸில் 5 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக 135 இன்னிங்ஸ்களில் 5 ஆயிரம் ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. இதனை டேவிட் வார்னர் தன்வசம் வைத்திருந்தார். அவருக்கு பின் விராட் கோலி 157 இன்னிங்ஸ்களில் 5 ஆயிரம் ரன்களை விளாசி 2வது இடத்திலும், 161 இன்னிங்ஸில் 5 ஆயிரம் ரன்களை விளாசிய டி வில்லியர்ஸ் 3வது இடத்திலும் இருந்தனர்.
இந்த நிலையில் 130 இன்னிங்ஸ்களிலேயே 5 ஆயிரம் ரன்களை விளாசி கேஎல் ராகுல் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார். லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை படைத்ததன் மூலமாக கேஎல் ராகுலுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் கடந்த சீசனில் லக்னோ உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா இதே மைதானத்தில் வைத்து கேஎல் ராகுலை திட்டி தீர்த்தார்.
தற்போது அவர் முன்னிலையிலேயே கேஎல் ராகுல் டெல்லி அணிக்காக விளையாடி லக்னோ அணியை வீழ்த்தியதோடு, பிரம்மாண்ட சாதனையையும் படைத்துள்ளார். அதேபோல் கடந்த சீசனை ஒப்பிடும் போது கேஎல் ராகுல் தேவைக்கேற்ப பவுண்டரி மற்றும் சிக்சர்களை அதிகமாக விளாசி வருவது குறிப்பிடத்தகக்து.