லக்னோ: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் நம்பர் 7ல் களமிறங்கி டக் அவுட்டாகி வெளியேறி இருப்பது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனால் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் நம்பர் 9ல் களமிறங்கிய தோனியை பின்பற்றி ரிஷப் பண்ட் செயல்பட்டதாக கிண்டல் செய்து வருகின்றனர்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை குவித்துள்ளது. வழக்கமாக நம்பர் 4ல் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்குவார். ஆனால் இன்றைய ஆட்டத்தில் நம்பர் 4ல் அப்துல் சமத் களமிறங்கி 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் நம்பர் 5ல் வருவார் என்று பார்க்கப்பட்ட போது டேவிட் மில்லர் களமிறங்கினார்.

தொடர்ந்து மிட்சல் மார்ஷ் ஆட்டமிழந்து வெளியேறிய போதாவது ரிஷப் பண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இம்பேக்ட் பிளேயராக ஆயுஷ் பதோனி களம் புகுந்தார். இதனால் லக்னோ மைதானத்தில் இருந்த ரசிகர்களே டென்ஷனாகினர். இறுதியாக பதோனி ஆட்டமிழந்த பின், கடைசி 2 பந்துகளை மட்டும் விளையாட ரிஷப் பண்ட் வந்தார்.
அப்போது வந்தும் 2 பந்துகளில் டக் அவுட்டாகி வெளியேறினார். ஐபிஎல் வரலாற்றில் கடைசி 113 இன்னிங்ஸ்களில் ரிஷப் பண்ட் நம்பர் 7ல் வருவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பாக 2016ஆம் ஆண்டு டெல்லி அணிக்காக அறிமுகமாகிய போது ரிஷப் பண்ட் நம்பர் 7 வீரராக களமிறங்கினார். அதன்பின் 9 ஆண்டுகளுக்கு பின் இப்போது மீண்டும் நம்பர் 7ல் வந்து விளையாடி இருக்கிறார்.
இதனிடையே ரிஷப் பண்ட் கைகளில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் தாமதமாக களமிறங்கியதாக கூறப்பட்டது. ஆனால் டாஸின் போது கைகள் நன்றாக இருப்பதாக ரிஷப் பண்ட் கூறி இருந்தார். ஒருவேளை கைகளில் காயம் இருந்தால், எப்படி விக்கெட் கீப்பிங் மட்டும் செய்ய முடிந்தது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரிஷப் பண்ட் தாமதமாக களமிறங்கியதற்கு குல்தீப் யாதவை டெல்லி அணி கேப்டன் அக்சர் படேல் பதுக்கி வைத்ததே காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இடதுகை பேட்ஸ்மேன்கள் வருவதற்கு முன்பாக அக்சர் படேல் தனது 4 ஓவர்களையும் வீசி முடித்திருந்தார். இதனால் பயம் காரணமாகவே ரிஷப் பண்ட் நம்பர் 7ல் களமிறங்கியதாக பார்க்கப்படுகிறது.
லக்னோ அணி கடைசி 12 ஓவர்களில் வெறும் 84 ரன்களை மட்டுமே சேர்த்திருந்ததால், அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா அமைதி இழந்து காணப்பட்டார். ஏனென்றால் ரிஷப் பண்ட்-க்கு ரூ.27 கோடி கொடுத்து வாங்கியது நம்பர் 7ல் களமிறங்கியதற்கா என்று புலம்பி வருகின்றனர். இதனிடையே குருவை சிஷ்யன் பின்பற்றியதாக கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.
ஏனென்றால் சேப்பாக்கம் மண்ணில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் தோனி நம்பர் 9 பேட்ஸ்மேனாக களமிறங்கினார். அவருக்கு முன்பாக அஸ்வின் களமிறங்கி ஆடினார். இதனால் குருவான தோனியை பின்பற்றி சிஷ்யனான ரிஷப் பண்ட்-ம் நம்பர் 7ல் களமிறங்கி டக் அவுட்டாகி இருப்பதாக கிண்டல் செய்து வருகின்றனர்.