லக்னோ: ஐபிஎல் தொடரின் 40வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதன்பின் லக்னோ அணி தரப்பில் மார்க்ரம் - மிட்சல் மார்ஷ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. அதேபோல் டெல்லி அணி தரப்பில் யாரும் எதிர்பாராத வகையில் அக்சர் படேல் அட்டாக்கில் வந்தார்.
மற்ற போட்டிகளில் அக்சர் படேல் 1 அல்லது 2 ஓவர்களை மட்டுமே வீசி வந்தார். ஆனால் இந்த போட்டியில் பவர் பிளேவில் மட்டுமே 3 ஓவர்களை வீசி லக்னோ அணியின் அதிரடியை கட்டுப்படுத்தினார். இதனால் 6 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 51 ரன்களை எடுத்தது. இதன்பின் மார்க்ரம் அதிரடியை தொடங்க, லக்னோ அணியின் கொஞ்சம் வேகமாக உயர்ந்தது.

சிறப்பாக ஆடிய அவர் 30 பந்துகளில் ஆட்டமிழக்க, தொடர்ந்து நிக்கோலஸ் பூரன் களம் புகுந்தார். அவருக்காகவே குல்தீப் யாதவ் மற்றும் மிட்சல் ஸ்டார்க் இருவரையும் அக்சர் படேல் பதுக்கி வைத்தார். அதற்கேற்ப குல்தீப் யாதவ் பவுலிங்கில் நிக்கோலஸ் பூரன் 2 பவுண்டரிகள் அடிக்க, அடுத்த ஓவரே மிட்சல் ஸ்டார்க் கொண்டு வரப்பட்டார். அவர் வீசிய ஸ்லோயர் பந்தில் ஏமாந்த பூரன் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன்பின் ரிஷப் பண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, அப்துல் சமத் களமிறக்கப்பட்டார். இன்னொரு பக்கம் மிட்சல் மார்ஷ் நிதானமாக ரன்கள் சேர்க்க, லக்னோ அணியின் ஸ்கோர் ஆமை வேகத்தில் உயர்ந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் முகேஷ் குமார் வீசிய 14வது ஓவரில் அப்துல் சமத் 2 ரன்களிலும், மிட்சல் மார்ஷ் 45 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
இப்போதாவது ரிஷப் பண்ட் வருவார் என்று ரசிகர்கள் பார்த்த போது, டேவிட் மில்லர் - பதோனி கூட்டணி களத்தில் இருந்தது. இருவராலும் பவுண்டரி அடிக்க முடியவில்லை. இதனால் 18 ஓவர்களில் லக்னோ அணியின் ஸ்கோர் 139 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதன்பின் கடைசி ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்த பதோனி, 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன்பின் கடைசி 2 பந்து மீதமிருக்கும் போது லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் களத்திற்கு வந்தார். அதிலும் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரிஷப் பண்ட் கடைசி நேரத்தில் வந்ததால், அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா சோகம் அடைந்தார்.