லக்னோ: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் நம்பர் 7 பேட்டிங் வரிசையில் களமிறக்கப்பட்டது ஏன் என்பது குறித்து தெரிய வந்துள்ளது. ரிஷப் பண்ட்-ஐ நம்பர் 7ல் களமிறக்கும் முடிவை லக்னோ அணியின் ஆலோசகர் ஜாகீர் கான் எடுத்ததாகவும், அது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 159 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்த போட்டியில் லக்னோ அணியின் பேட்டிங் வரிசை மொத்தமாக மாற்றப்பட்டிருந்தது.

ஏனென்றால் ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட், இந்த சீசனில் இதுவரை 106 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். மோசமான பேட்டிங் ஃபார்மில் ஆடி வரும் ரிஷப் பண்ட், கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தனது வழக்கமான நம்பர் 4ல் களமிறக்கப்படாமல், நம்பர் 7ல் களமிறக்கப்பட்டார்.
நிக்கோலஸ் பூரன் ஆட்டமிழந்த பின்னரே ரிஷப் பண்ட் வருவார் என்று பார்க்கப்பட்டது. ஆனால் கொஞ்சம் கூட சம்மந்தம் இல்லாமல் அப்துல் சமத் களமிறக்கப்பட்டு, பின்னர் இம்பேக்ட் பிளேயராக ஆயுஷ் பதோனி களமிறக்கப்பட்டார். கடைசி 2 பந்துகள் இருக்கும் போது வந்த ரிஷப் பண்ட், டக் அவுட்டாகி வெளியேறினார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் நம்பர் 7ல் களமிறக்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேசுகையில், பேட்டிங் ஆர்டர் மாற்றப்பட்டது அந்த சூழலை சாதகமாக்க எடுக்கப்பட்ட முயற்சிதான். இதுபோன்ற ஒரு பிட்சில் அப்துல் சமத்தால் ரன்கள் குவிக்க முடியும் என்று நினைத்தோம். அதன்பொன் மில்லர் களமிறங்கிய பின், லக்னோ அணி ஒரு மாதிரி சிக்கிக் கொண்டது. இதுபோன்ற சில விஷயங்களில் சரியாக செயல்பட வேண்டும்.
அடுத்தடுத்து எங்களின் காம்பினேஷனிலும் சரியாக இருக்க வேண்டும். இம்பேக்ட் பிளேயராக ஆயுஷ் பதோனியை களமிறக்குவதற்கு காரணம் மயங்க் யாதவ் தான். ஒருவேளை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒருவர் 20 ஓவர்களும் ஆடினால், எங்களால் மயங்க் யாதவை அணிக்குள் கொண்டு வர முடியும். அவரை எப்படி பிளேயிங் லெவனுக்குள் பொருத்துவது என்பதை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதன் மூலமாக ரிஷப் பண்ட் காயம் காரணமாக தாமதமாக பேட்டிங் ஆட வரவில்லை. லக்னோ அணியின் ஆலோசகர் ஜாகீர் கான் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஆகியோர் எடுத்த மோசமான முடிவு காரணமாகவே ரிஷப் பண்ட் நம்பர் 7ல் பேட்டிங் செய்ய வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.