லக்னோ: 2025 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட்டின் மோசமான பேட்டிங் தொடர்ந்து வருகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் துவக்க வீரராக களம் இறங்கினார். கடந்த ஆட்டங்களில் சரியாக ரன் குவிக்காத நிலையில், இந்த போட்டியில் 181 ரன்கள் சேசிங் செய்தபோது அவர் துவக்க வீரராக இறங்கினார்.
இதை அடுத்து ரிஷப் பண்ட் விரைவாக ரன் சேர்ப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அவரும் 18 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார். ஆனால் அத்துடன் அவர் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதை அடுத்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் இதுவரை 6 போட்டிகளில் 5 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து வெறும் 40 ரன்கள் மட்டுமே சேர்த்திருக்கிறார்.

இதற்கு முன்பு நான்கு இன்னிங்ஸ்களில் 19 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இந்த போட்டியில் சற்று முன்னேறி 21 ரன்கள் எட்டி இருக்கிறார். ஒரு போட்டிக்கு சராசரியாக 8 ரன்களை எடுத்து இருக்கிறார்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற வீரராக இருக்கும் ரிஷப் பண்ட் இப்படி மோசமாக ஆடி வருவது ஏமாற்றத்தை அளித்துள்ளது. பலரும் ரிஷப் பண்டை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் நிலையில், அந்த அணி தற்போது அதிக வெற்றிகளை பெற்றிருப்பதால் ரிஷப் பண்டின் ஆட்டம் இதுவரை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
ஐபிஎல் ஏலத்தின் வரலாற்றிலேயே அதிக தொகையான 27 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் பண்ட் வாங்கப்பட்டு இருக்கிறார். ஆனால், அந்த அணிக்காக ஒரு பேட்ஸ்மேனாக அவர் இதுவரை மிக மோசமான ஆட்டத்தையே அளித்திருக்கிறார் என பலரும் சுட்டிக்காட்டி விமர்சித்து வருகின்றனர்.
அவரது பேட்டிங் சரியில்லை எனவும், அவரை நீக்கினாலும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெறும் எனவும் ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். தற்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இருக்கும் எய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி போன்ற வீரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கின்றனர்.
அதனாலேயே ரிஷப் பண்ட்டின் பேட்டிங் பலவீனம் அந்த அணியை பாதிக்கவில்லை. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 181 ரன்கள் என்ற இலக்கை 19.4 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.