லக்னோ: 2025 ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, ஏலத்தில் ரிஷப் பண்ட்டை 27 கோடி ரூபாய்க்கு வாங்கினார். மேலும் அவரையே கேப்டனாகவும் நியமித்தார். இதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இந்த ஆண்டு பிளே ஆஃப்க்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இதில் முதல் அதிர்ச்சியாக 27 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட் சரியாக பேட்டிங் செய்யவில்லை. அவரது பேட்டிங் படுமோசமாக அமைந்து இருக்கிறது. மறுபுறம் அவரது கேப்டன்சியும் கேள்விக்குறியாகி இருக்கிறது. அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், ஆலோசகர் ஜாகீர் கான் மற்றும் ரிஷப் பண்ட்டுக்கும் இடையே சரியான புரிதல் இல்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்த நிலையில், முதல் ஆறு போட்டிகளில் நான்கு வெற்றிகளைப் பெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, அடுத்த ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று இருக்கிறது. மொத்தம் 11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளை மட்டும் பெற்று 10 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பெறலாம் என்ற நிலை உள்ளது.
இந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்குக் கடும் போட்டி நிலவி வருவதால், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அடுத்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று மொத்தம் 16 புள்ளிகளைப் பெற்றாலும், பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகக் கிடைக்கும் எனச் சொல்ல முடியாது. ஏனெனில் மற்ற அணிகளின் நெட் ரன் ரேட் அடிப்படையிலும் அந்த அணி அதிகமாக முன்னே இருக்க வேண்டும்.
ஆனால், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய மூன்று அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இதுவரை வலுவாக ஆடி வருகின்றன. அந்த இரண்டு அணிகளையும் வெல்வது என்பது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு சவாலான ஒன்றாக இருக்கும். எனவே, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது மிகவும் கடினமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
இதை அடுத்து சஞ்சீவ் கோயங்கா அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை என்றால், அவர் ரிஷப் பண்ட்டை அணியில் இருந்து விடுவிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏனெனில், ரிஷப் பண்ட்டின் பேட்டிங்கில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறார்.