கொழும்பு: கொழும்பு நகரில் விடுதலைப புலிகள் ரசாயன குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தப் போவதாக இலங்கையில் பீதி கிளம்பியுள்ளது.
இலங்கையில் பாதுகாப்புப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சண்டை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு புலிகள் விமானப்படை மூலம் நடத்திய தாக்குதல் இலங்கை அரசை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில், விடுதலைப் புலிகள் ரசாயன குண்டு வீசித் தாக்க திட்டமிட்டிருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
விடுதலைப் புலிகள் கொழும்பு மற்றும் முக்கிய இடங்களில் ரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தபோது ரசாயன குண்டுகளைத் தயாரிக்கத் தேவையான பொருட்களை புலிகள் இறக்குமதி செய்து வைத்திருந்தனர்.
ஆதம்பான் என்ற இடத்தில் புலிகள் ரசாயன ஆய்வுக்கூடம் ஒன்றை வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இங்கு ரசாயன ஆயுதங்கள் தயாரிப்பது தொடர்பாக அவர்கள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
அதனால் இலங்கையின் முக்கியமான இடங்களின் மீது எந்த நேரத்திலும் புலிகள் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தலாம் என்றார் அவர். இந்தத் தகவலால் இலங்கையில் பீதி நிலவுகிறது.