டோமினிக்கா: வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராட்வெய்ட் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இதில் இந்திய அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். முதல்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்க உள்ள இஷான் கிஷனுக்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கேப்பை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் முதல் போட்டியிலேயே நீக்கப்படும் அளவிற்கு கேஎஸ் பரத் என்ன தவறு செய்தார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஏனென்றால் பேட்டிங்கில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் விக்கெட் கீப்பிங்கில் கேஎஸ் பரத்தின் ஆட்டம் சிறப்பாகவே அமைந்தது. குறிப்பாக பார்டர் கவாஸ்கர் தொடரில் அஸ்வின், ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோரின் பந்துகளை சிறப்பாக கைகளில் எடுத்தார்.
அதேபோல் முதல்முறையாக இங்கிலாந்து மண்ணில் விக்கெட் கீப்பிங் செய்த போதும் கேஎஸ் பரத்தின் ஆட்டம் முன்னாள் வீரர்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. முதிர்ச்சியடைந்த வீரரை போல் கேஎஸ் பரத் விக்கெட் கீப்பிங் செய்வதாக வர்ணனையில் பலரும் பாராட்டினர். இந்த நிலையில் ஸ்பின்னுக்கு சாதகமாகவும், மெதுவான விக்கெட்டாக உள்ள வின்ஸ்சர் பார்க் மைதானத்தில் கேஎஸ் பரத் நீக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் பிளாட் பிட்ச்களிலேயே மோசமாக விக்கெட் கீப்பிங் செய்த இஷான் கிஷன், டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி தாங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் ரிஷப் பண்ட் இடத்தை நிரப்ப அவரைப் போலவே விளையாடும் இஷான் கிஷன் தேர்வை புரிந்துகொள்ள முடிவதாகவும் ஒரு சாரர் கருத்து வருகின்றனர்.
அதேபோல் கடினமான அணியான ஆஸ்திரேலியாவுடன் களமிறக்கப்பட்ட கேஎஸ் பரத்திற்கு, சாதாரண அணியாக உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஆடுவதால் மட்டுமே இஷான் கிஷனுக்கு ரோகித் சர்மா வாய்ப்பு வழங்கியுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.