சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணிக்கு எதிராக லக்னோ அணி விளையாட உள்ள போட்டியில், முன்னாள் சிஎஸ்கே வீரர்களான கிருஷ்ணப்பா கெளதம், மார்க் வுட் ஆகியோர் அந்த அணியின் பிரதான பந்துவீச்சாளர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2019ஆம் ஆண்டுக்கு பின் சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் சென்னை அணி களமிறங்க உள்ளது. இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், 1,426 நாட்களுக்கு பின் தல தோனி மீண்டும் தனது கோட்டைக்குள் களமிறங்க போகிறார்.

ஆம், சிஎஸ்கே அணியின் கோட்டை தான் சேப்பாக்கம் மைதானம், இந்த கோட்டையில் எந்த கொம்பனாலும் சிஎஸ்கே அணியை அவ்வளவு எளிதாக வீழ்த்திட முடியாது. கண் இமைக்கும் நேரத்தில் ஆட்டத்தை சிஎஸ்கே அணியால் மாற்றிட முடியும்.
ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள் முன் கடைசியாக ஒருமுறை தோனி தனது அரியாசனத்திற்காக களமிறங்கப் போவது தான் சென்னையை திருவிழாக் கோலமாக்கியுள்ளது. கடைசியாக ஒருமுறை தனது ரசிகர்களுக்காகவும், அணிக்காகவும் ருத்ரதாண்டவத்தை (The Last Dance) ஆடப் போகிறார் தல தோனி. அதற்கான முதல் படி தான் லக்னோ அணிக்கு எதிரான சவால்.
யாரும் எதிர்பாராத வகையில் வலிமையான டெல்லி அணியை சொந்த மண்ணில் வைத்து வென்று கர்ஜித்து நிற்கிறது லக்னோ அணி. கைல் மேயர்ஸும், மார்க் வுட்டும் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆடிய ஆட்டம் சென்னை அணி ரசிகர்களை கொஞ்சம் அச்சமடைய வைத்துள்ளது. ஆனால் சேப்பாகத்தில் வெற்றிபெற வேண்டும் என்றால், எந்த அணியாக இருந்தாலும் ஸ்பின்னர்கள் முக்கியம்.
சென்னை அணிக்கு ஜடேஜா, சான்ட்னர், மொயின் அலி என்று ஏராளமானோர் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் முதல் பேட்டிங் செய்தால் இம்பேக்ட் பிளேயராக லெக் ஸ்பின்னர் பிரசாந்த் சொலங்கி நிச்சயம் வர வாய்ப்பு உள்ளது. இரண்டாவது பேட்டிங் என்றால், பிரதான லெவனிலேயே பிரசாந்த் சொலங்கி இருக்க வாய்ப்புகள் அதிகம்.

ஆனால் லக்னோ அணிக்கு ரவி பிஷ்னாய் மட்டுமே சுழற்பந்துவீச்சாளராக செயல்படுகிறார். அவரும் சுழற்பந்துகளை விடவும் அதிகமாக கூக்ளி பந்துகளையே வீசுவார். இதனால் கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் மார்க் வுட் ஆகியோர் பிரதான பிளேயிங் லெவனில் நிச்சயம் இடம்பெறுவார்கள். ஏனென்றால் சென்னையில் விளையாடி உள்ள அனுபவம் இருப்பதால், அவர்களின் அனுபவத்தை பயன்படுத்த லக்னோ அணி திட்டமிடும்.
இன்னொரு முக்கியமான வாய்ப்பு லக்னோ அணிக்கு உள்ளது. அது முதலில் பேட்டிங் செய்தால் இன்பேக்ட் பிளேயராக அமித் மிஸ்ராவை கொண்டு வரவும், இரண்டாவது பேட்டிங் செய்தால் பந்துவீசுவதற்கு ஏதுவாக அமித் மிஸ்ராவை பிரதான அணியில் வைக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் நீண்ட பேட்டிங் வரிசை கொண்ட லக்னோ அணியில், சுமாரான ஃபார்மில் உள்ள கே.எல்.ராகுல் சென்னை அணிக்கு எதிராக 2019ஆம் ஆண்டு முதல் பேட்டிங் சராசரியாக 60 வைத்துள்ளார். இதனால் ஆட்டத்தில் கடைசி நொடி வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்பது நிச்சயம். எதற்கும் ரசிகர்கள் பிபி டாப்லெட்டை வைத்து கொள்வது நல்லது என்று பார்க்கப்படுகிறது.