மும்பை: ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக பணியாற்றி வந்த ஜாகீர் கானை நீக்க அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா முடிவு எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளராக பரத் அருண் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், புதிய ஆலோசகருக்கான தேடலில் லக்னோ அணி நிர்வாகம் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் லக்னோ அணி 4 சீசன்களாக விளையாடி இருக்கும் நிலையில், இதுவரை 2 முறை மட்டும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. அந்த இரு முறையும் கவுதம் கம்பீர் ஆலோசகராக இருந்தார். இதன்பின் 3வது சீசனில் கேஎல் ராகுலை மோசமாக நடத்தியதால், அவர் அணியில் இருந்து வெளியேறினார். இதன்பின் கடந்த மெகா ஏலத்தில் ரிஷப் பண்டை ரூ.27 கோடிக்கு லக்னோ அணி வாங்கியது.

அதற்கு முன்பாக லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய ஜாம்பவான் ஜாகீர் கான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனாலும் லக்னோ அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியவில்லை. அதற்கு லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்-ன் மோசமான ஆட்டமே முக்கிய காரணமாக அமைந்தது. இதனிடையே லக்னோ அணி பல்வேறு லீக் தொடர்களிலும் முதலீடுகளை செய்ய தொடங்கியது.
எஸ்ஏ20 லீக் தொடர், ஹண்ட்ரட் லீக் தொடர்களில் லக்னோ அணி முதலீடு செய்துள்ளது. ஏற்கனவே கால்பந்து விளையாட்டிலும் எல்எல்ஜி குரூப் முதலீடு செய்திருக்கிறது. இந்த நிலையில் 3 அணிகளை கவனிக்கும் வகையில் ஒருவரை தலைமை பொறுப்புக்கு கொண்டு வர சஞ்சீவ் கொயங்கா முடிவு எடுத்துள்ளார். இதனால் லக்னோ அணியின் ஆலோசகர் ஜாகீர் கான் உடனான உறவை சஞ்சீவ் கொயங்கா முறித்துள்ளார்.
ஏற்கனவே லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளராக பரத் அருண் சில நாட்களுக்கு முன்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்போதே ஜாகீர் கான் லக்னோ அணியில் இருந்து நீக்க இருப்பதாக கூறப்பட்டது. தற்போது லக்னோ அணியுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் சிலர், ஜாகீர் கான் நீக்கத்தை உறுதி செய்திருக்கின்றனர்.
சஞ்சீவ் கொயங்கா வழக்கமாக மற்ற அணிகளை விடவும் அதிக ஊதியம் கொடுத்து நிர்வாகிகளை ஒப்பந்தம் செய்யும் பழக்கம் உள்ளவர். அதற்கேற்ப உடனடியாக முடிவுகளையும் எதிர்பார்க்க கூடியவர். இல்லையென்றால் முகத்திற்கு நேராகவே விமர்சிப்பார். இதனை பல முறை கேஎல் ராகுல் அனுபவித்ததன் காரணமாகவே, அவர் விலகி சென்றார்.
இதனால் சஞ்சீவ் கொயங்கா அடுத்ததாக யாரை பொறுப்புக்கு கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே தலைமைப் பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் செயல்பட்டு வரும் நிலையில், அவரையும் நீக்குவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் லக்னோ அணி இம்முறை புதிய பயிற்சியாளர் குழுவுடன் களமிறங்கலாம் என்று கருதப்படுகிறது.