பெங்களூரு: ஆர்சிபி அணியின் பயிற்சியாளராக ஆண்டி பிளவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட ட்விட்டர் பதிவிற்கு கீழ், லக்னோ அணி தரப்பில் அளிக்கப்பட்ட ரிப்ளை காரணமாக இரு அணிகளும் மீண்டும் பஞ்சாயத்தை தொடங்கியுள்ளனர்.
அண்மையில் லக்னோ அணியின் பயிற்சியாளராக இருந்த ஆண்டி பிளவரின் 2 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பாத லக்னோ அணி, புதிய பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கரை ஒப்பந்தம் செய்தது. இதற்கு பின்னணியில் லக்னோ அணியின் ஆலோசகரான கவுதம் கம்பீர் இருந்திருக்கிறார்.

இந்த நிலையில் ஆர்சிபு அணியில் புதிய பயிற்சியாளராக ஆண்டி பிளவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆர்சிபி அணி நிர்வாகம் நேற்று வெளியிட்டது. லக்னோ அணியின் பயிற்சியாளராக இருந்த ஆண்டி பிளவருக்கு, ராஜஸ்தான், ஐதராபாத் உள்ளிட்ட அணிகள் வலை விரித்த நிலையில், கடைசியாக ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் லக்னோ அணிக்கும் ஆர்சிபி அணிக்கும் ஏற்கனவே கடந்த ஐபிஎல் தொடரின் போது மோதல் ஏற்பட்டது. ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, லக்னோ அணியின் கவுதம் கம்பீர், கைல் மேயர்ஸ் மற்றும் நவீன் உல் ஹக் உள்ளிட்டோருடன் நேரடி மோதலிலேயே ஈடுபட்டார். இதனால் இரு அணிகளுக்கு இடையில் புதிய ரைவல்ரி உருவாகியது.
தற்போது இந்த ரைவல்ரியை ஆர்சிபி அணி அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது. லக்னோ அணியின் முன்னாள் பயிற்சியாளரான ஆண்டி பிளவரை ஒப்பந்தம் செய்தது, பெங்களூரு அணி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிரி கூடாரத்தில் இருந்தே முக்கிய நபர் எப்படி ஆர்சிபி-க்கு சரியாக இருப்பார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் ஆர்சிபி அணியின் ட்விட்டர் பக்க அறிவிப்புக்கு கீழ் லக்னோ அணி தரப்பில், இது இன்னும் சுவாரஸ்யமாக மாறியுள்ளது. வாழ்த்துகள் ஆண்டி பிளவர் என்று பதிவிட்டுள்ளது. இதனால் ட்விட்டரில் இரு அணி வீரர்களும் மீண்டும் மோதலை தொடங்கியுள்ளனர். இதனால் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடர் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.