டெல்லி: பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பட்டம் வென்று அசத்தியுள்ளது. ஆனால் சாதனை படைத்து தாயகம் திரும்பிய இந்திய அணியை வரவேற்க மக்கள் கூட்டம் வரவில்லை. அதிகாரிகளும் கூட பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. அதேசமயம், பிரதமர் நரேந்திர மோடி நடந்து கொண்ட விதம் பெரும் ஆறுதலைக் கொடுத்துள்ளது.
4வது பார்வையற்றோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. இதில் இறுதிப் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின.
கேப்டவுனில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. பாகிஸ்தான்தான் நடப்புச் சாம்பியன் என்பது நினைவிருக்கலாம்.
இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் 40 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 389 ரன்களைக் குவித்திருந்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 39.4 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்புக்கு 392 ரன்களைக் குவித்து வெற்றி கண்டது. இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
கோப்பையுடன் தாயகம் திரும்பிய அணிக்கு டெல்லி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த வரவேற்பில் மக்கள் கூட்டம் அதிகம் இல்லை. இதுவோ டோணியோ, கோஹ்லியோ வந்திருந்தால் விமான நிலையத்தையே ஸ்தம்பிக்க வைத்திருப்பார்கள் ரசிகர்கள். ஆனால் பார்வையற்ற இந்திய அணியின் சாதனையை மதிக்கவோ, பாராட்டவோ கூட்டம் கூடவில்லை. அதிகாரிகளும் கூட சொற்ப அளவில்தான் வந்திருந்தார்கள். ஒரே பெரிய ஆறுதல் விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் நேரில் வந்திருந்துதான்.
அட எதற்கெடுத்தாலும் காட்டுக் கத்தல் கத்தும் வட இந்திய மீடியாக்கள் கூட சரிவர வரவில்லை என்பதுதான் கொடுமையானது.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடியை உண்மையிலேயே பாராட்ட வேண்டும். இந்திய அணி வீரர்களை தனது அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்த அவர் ஒவ்வொரு வீரரையும் தனித் தனியாக பார்த்து பாராட்டிப் பேசினார். அத்தோடு நில்லாமல் ஒவ்வொரு வீரருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தனது டிவிட்ர் பக்கத்திலும் ஒவ்வொரு வீரரையும் தனித் தனியாக பாராட்டி, வாழ்த்தி செய்தியும் போட்டுள்ளார்.
கைகளைப் பலமாக தட்டி சபாஷ் போட்டு இந்த வீரர்களைப் பாராட்டுவோம்.. !