கோவை: நெல்லை அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய இளம் வீரர் சாய் சுதர்சன் 90 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை மீண்டும் தவறவிட்டுள்ளார். இவரது ஆட்டம் காரணமாக நெல்லை அணி வெற்றிபெற 182 ரன்களை இலக்காக கோவை அணி நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணிக்கு எதிராக குஜராத் அணிக்காக ஆடிய சாய் சுதர்சன் 47 பந்துகளில் 96 ரன்கள் விளாசி அசத்தினார். உலகமே பார்த்துக் கொண்டிருந்த போட்டியில் தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது சென்னை அணி ரசிகர்களுக்கும் கூட மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதே ஃபார்மை சாய் சுதர்சன் டிஎன்பிஎல் தொடரிலும் தொடர்ந்து வருகிறார்.

டிஎன்பிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கோவை அணியை எதிர்த்து நெல்லை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி கேப்டன் அருண் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கோவை அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய சச்சின் ரன் எடுக்காமல் ஆட்டமிழக்க, சாய் சுதர்சன் களம் புகுந்தார். இவர் சோனு யாதவ் வீசிய 4வது ஓவரில் மட்டும் 2 பவுண்டரிகளை விளாச, இந்த அதிரடி ஆட்டம் எங்குமே நிற்கவில்லை.
35 பந்துகளில் அரைசதம் விளாசிய சாய் சுதர்சன், அதன்பின்னர் அதிரடியை அடுத்த கியருக்கு மாற்றினார். இதன் காரணமாக 15 மற்றும் 16 ஆகிய ஓவர்களில் மொத்தமாக 3 சிக்சர்களை விளாசி சாய் சுதர்சன் அசத்தினார். 52 பந்துகளில் 90 ரன்கள் விளாசியிருந்த நிலையில், சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 19வது ஓவரை வீசிய பொய்யாமொழி பந்துவீச்சில் சாய் சுதர்சன் 90 ரன்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். இவரின் அதிரடி ஆட்டம் காரணமாக 20 ஓவர்களில் கோவை அணி 181 ரன்கள் சேர்த்தது.
ஏற்கனவே திருப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் சாய் சுதர்சன் 45 பந்துகளில் 86 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் வரும் போட்டிகளில் சாய் சுதர்சன் நிச்சயம் சதம் விளாசுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் சிறந்த பேட்டிங் ஃபார்மில் உள்ள சாய் சுதர்சன் நிச்சயம் இந்திய ஏ அணியில் இடம்பிடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.