சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 லீக் தொடரில் நேற்றைய போட்டியில், சூப்பர் ஓவரில் கோவை கிங்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் காஞ்சி வாரியர்ஸ் வென்றது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 3-வது ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ரூபி காஞ்சி வாரியர்ஸ் அணியின் கேப்டன் பாபா இந்திரஜித் பீல்டிங் தேர்வு செய்தார்.
இதையடுத்து லைகா கோவை கிங்ஸ் அணி பேட்டிங்கை தொடர்ந்தது. அந்த அணிக்கு சூர்யபிரகாஷ் மற்றும் முரளி விஜய் ஆகியோர் தொடக்கம் தந்ததனர். சூர்ய பிரகாஷ் 5 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த சீனிவாசன் 8 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். கேப்டன் முரளி விஜய் 24 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் வந்த அனிருத் சீதா ராம் 39 ரன்னும், ஹரிஸ் குமார் 26 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். விக்கெட் கீப்பர் ரோகித் அவுட்டாகாமல் 9 பந்தில் 15 ரன்கள் எடுக்க லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. ரூபி அணியில் ஜேசுராஜ், கவுசிக் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.
இதன்பின்னர் 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ரூபி காஞ்சி வாரியர்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் பரத் சங்கர் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். நிலைத்து நின்று ஆடிய மற்றொரு தொடக்க வீரர் நிலேஷ் சுப்பிரமணியன் 42 பந்துகளில் 49 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையில் கேப்டன் பாபா இந்திரஜித் மட்டும் சமாளித்துக்கொண்டு கடைசி வரை போராடினார். இருப்பினும் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், ஆட்டம் டிரா ஆனது.
இதனையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. அதில் காஞ்சி அணி 13 ரன்கள் எடுத்தது. 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கோவை அணி 9 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், காஞ்சி வாரியர்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பீல்டிங் மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட காஞ்சி அணி வீரர் நிலேஷ் சுப்பிரமணியன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.