நெல்லை: திருச்சி வாரியர்ஸ் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் வீழ்த்தியது.
நெல்லையில் நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரின் 11-வது லீக் போட்டியில், திருச்சி வாரியர்சும், கோவை கிங்சும் மோதின. டாஸ் வென்ற கோவை, முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக அந்த அணியின் கேப்டன் அபினவ் முகுந்த் மற்றும் ஷாருக்கான் களமிறங்கினர்.

முகுந்த் 5 ரன்னிலும், ஷாருக்கான் 11 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர். பின்னர் ரஞ்சன் பால் 34 ரன் எடுத்த நிலையில் அவுட்டானார். ரங்கராஜன் 22 ரன்னில் பெவிலியன் திரும்ப, அதிரடியாக ஆடிய அந்தோனி தாஸ் 13 பந்துகளில் 3 சிக்சர்கள் உள்பட 32 ரன்கள் விளாசினார்.

இறுதியில் கோவை கிங்ஸ், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. திருச்சி வாரியர்ஸ் தரப்பில் விக்னேஷ் மற்றும் பொய்யா மொழி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 162 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய திருச்சி வாரியர்ஸ் தொடக்க வீரர்கள் கேப்டன் முகுந்த் 2 ரன்னிலும், அரவிந்த் 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய ஆதித்யா மற்றும் கணேஷ் அணியை சரிவிலிருந்து சற்று மீட்டனர். ஆனாலும் ஆதித்யா 27 ரன்களிலும், கணேஷ் 24 ரன்களிலும் வெளியேறினர். அதன் பின் வந்தவர்கள் கோவை கிங்ஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறி கொடுத்தனர்.

முடிவில், திருச்சி வாரியர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 26 ரன்கள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் வெற்றி பெற்றது. கோவை கிங்ஸ் அணியில் நடராஜன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.