மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் அனுபவத்தையும், வியூகங்களையும் இந்திய அணிக்காகப் பயன்படுத்திக்கொள்ள ஒரு புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி கம்பீரை விட பெரிய பதவி ஒன்றில் தோனியை நியமிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய அணியின் மூன்று விதமான வடிவங்களுக்கும் (டெஸ்ட், ஒருநாள், டி20) தோனியை ஆலோசகராக நியமிக்க பிசிசிஐ விரும்புவதாகவும், இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், மகளிர் அணி மற்றும் ஜூனியர் அணிகளுக்கும் ஆலோசகராக செயல்பட்டால் இந்திய கிரிக்கெட் பன்மடங்கு முன்னேறும் என பிசிசிஐ தெரிவித்து இருக்கிறது.

முதற்கட்டமாக 2021 டி20 உலகக்கோப்பையை போல, 2026 டி20 உலகக்கோப்பை தொடருக்கு மட்டும் தோனியை ஆலோசகராக இருக்குமாறு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், இந்த மிகப்பெரிய வாய்ப்பை தோனி நிராகரிக்கக் கூடும் என பிசிசிஐ வட்டாரத்தில் உள்ள சிலரே கூறுகின்றனர். இதற்குக் காரணம், இந்திய அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளரான கௌதம் கம்பீர்.
மூன்று விதமான ஐசிசி கோப்பைகளையும் (டி20 உலகக் கோப்பை 2007, ஒருநாள் உலகக் கோப்பை 2011, சாம்பியன்ஸ் டிராபி 2013) வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமைக்குரியவர் தோனி. அவரது கூல்' கேப்டன்சி, களத்தில் எடுக்கும் துல்லியமான முடிவுகள் மற்றும் இளம் வீரர்களை வழிநடத்தும் திறன் ஆகியவை இளம் வீரர்களுக்கு பாடமாக இருக்கும். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு அவரது வழிகாட்டுதல் மிக முக்கியக் காரணம். இந்த அனுபவத்தை இந்திய அணிக்காகப் பயன்படுத்திக்கொள்ளவே பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.
தோனி மற்றும் கம்பீர் ஆகிய இருவரும் இந்திய அணிக்காக இணைந்து பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்திருந்தாலும், இருவருக்கும் இடையே கடந்த காலங்களில் சில கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோனி அடித்த சிக்ஸர் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுவதாகவும், தனது 97 ரன்கள் உட்பட மற்ற வீரர்களின் பங்களிப்பு குறைவாக மதிப்பிடப்படுவதாகவும் கம்பீர் பலமுறை தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தோனி அமைதியானவர், செயல்முறைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். ஆனால், கம்பீர் ஆக்ரோஷமானவர், வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுபவர். இருவரின் அணுகுமுறைகளும் முற்றிலும் நேர் எதிரானவை.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக, கம்பீர் தனது திட்டங்களையும், வியூகங்களையும் சுதந்திரமாகச் செயல்படுத்தவே விரும்புவார். தோனி போன்ற ஒரு மிகப்பெரிய ஆளுமை ஆலோசகராக வரும்போது, அது தனது அதிகாரத்தில் தலையிடுவதாக அமையலாம் என்று கம்பீர் கருத வாய்ப்புள்ளது. "இரண்டு வாள்கள் ஒரே உறையில் இருக்க முடியாது" என்பதைப் போல, இரண்டு வலுவான தலைமைப் பண்பு கொண்டவர்கள் ஒரே நேரத்தில் அணியில் இருப்பது, குழப்பத்தையே ஏற்படுத்தும் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதை விட, அணியின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் தோனி. கம்பீருடன் இணைந்து பணியாற்றுவது, அணிக்குள் தேவையற்ற சலசலப்புகளையும், அதிகாரப் போட்டியையும் உருவாக்கும் என்று அவர் கருதினால், இந்த வாய்ப்பை அவர் கண்ணியமாக மறுத்துவிடவே அதிக வாய்ப்புள்ளது.
பிசிசிஐ, இந்திய கிரிக்கெட்டின் இரண்டு மாபெரும் ஜாம்பவான்களின் சேவையையும் பெற விரும்புகிறது. ஆனால், அவர்களின் கடந்த கால கருத்து வேறுபாடுகள் நிகழ்காலத்தில் சிக்கலை ஏற்படுத்துவதாகவும், இந்த முயற்சியில் பெரும் தடையாக நிற்பதாகவும் தெரிகிறது. இந்தச் சிக்கலை பிசிசிஐ எப்படிச் சமாளிக்கப் போகிறது, தோனி-கம்பீர் கூட்டணி இந்திய கிரிக்கெட்டில் சாத்தியமாகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.