திருநெல்வேலி: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் கோவை, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளன. இதனால் பிளே-ஆப் சுற்றில் கால்பதிக்கும் 4வது அணிக்கான பந்தயத்தில் நடப்பு சாம்பியன் சென்னை, முன்னாள் சாம்பியன் மதுரை, திருப்பூர் அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது.
இந்த நிலையில் மதுரை அணியை எதிர்த்து திருப்பூர் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து மதுரை அணி சார்பாக தொடக்க வீரர்கள் சுரேஷ் லோகேஸ்வர், ஹரி நிஷாந்த் இருவரும் அதிரடியாக விளையாடினர். அடுத்தடுத்து பவுண்டரி , சிக்சருக்கு பறக்கவிட, முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்க்கப்பட்டது.

இதையடுத்து ஹரி நிஷாந்த் 34 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து சுரேஷ் லோகேஸ்வர் 44 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த ஆதித்யா சிறப்பாக விளையாடி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் மதுரை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து 161 ரன்கள் என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விஷ்னு வைத்யா 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான துஷார் ரஹேஜா சிறப்பாக விளையாடி 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விஜய் சங்கர் 28 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தின் கடைசி ஓவரில் திருப்பூர் அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் முதல் இரு பந்துகளில் சிக்ஸ், பவுண்டரி என 10 ரன்கள் விளாசப்பட்ட நிலையில், 4 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டது.
ஆனால் அடுத்த 4 பந்துகளை குர்ஜப்னீத் சிங் துல்லியமாக வீசியதால், திருப்பூர் பேட்ஸ்மேன்களால் பவுண்டரி அடிக்க முடியவில்லை. இறுதியில் திருப்பூர் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களே எடுக்கமுடிந்தது. இதன் மூலம் பரபரப்பான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை அணி வெற்றிபெற்றது. இதன் மூலம், கடைசி அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது. இதன் மூலம் கோவை, திண்டுக்கல், நெல்லை மற்றும் மதுரை அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.