பெங்களூர்: மகாராஷா டிராபி டி20 லீக் தொடரில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் - ஹூப்லி டைகர்ஸ் இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஹூப்லி டைகர்ஸ் அணி 20 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக கேப்டன் மணிஷ் பாண்டே 22 பந்துகளில் 33 ரன்களும், மன்வந்த் குமார் 15 பந்துகளில் 27 ரன்களும் விளாசினர்.
இதன்பின் களமிறங்கிய பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி 19 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி ஓவரில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்கப்பட்டது. 2வது பந்தில் அதிரடியாக ஆடிய நவீன் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து அடுத்த 3 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே சேர்க்கப்பட்டது. இதனால் கடைசி 1 பந்தில் ஒரு ரன் வெற்றிக்கு தேவையாக இருந்தது.

அப்போது கிராந்தி குமார் ரன் அவுட்டாக, ஆட்டம் சமனில் முடிவடைந்து, சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் முதல் பேட்டிங் ஆடிய பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி அனிருதா ஜோஷியின் சிக்சரால் 10 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய ஹூப்லி டைகர்ஸ் அணியில் மணிஷ் பாண்டே சிக்சர் அடித்து அசத்தினார். அதிலும் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது ஒரு ரன் மட்டுமே சேர்க்கப்பட்டு, ஆட்டம் 2வது சூப்பர் ஓவருக்கு சென்றது.
2வது சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் ஆடிய ஹூப்லி டைகர்ஸ் அணிக்கு மணிஷ் பாண்டே - மன்வந்த் குமார் கூட்டணி களமிறங்கியது. அதில் 8 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்ட நிலையில், 9 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அப்போது பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணிக்காக களமிறங்கிய சேத்தன் - அனிருதா ஜோஷி இணை களமிறங்கியது. முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்கப்பட்ட நிலையில், 3வது பந்தில் சேத்தன் ஆட்டமிழந்தார். பின்னர் அடுத்த 3 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே சேர்க்கட்டு மீண்டும் ஆட்டம் சமனில் முடிவடைந்தது.
இதனால் 3வது சூப்பர் ஓவர் கொண்டு வரப்பட்டது. இதில் முதல் பேட்டிங் ஆடிய பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி ஒரு சிக்ஸ் உட்பட 12 ரன்களை குவித்தது. இதனால் ஹூப்லி டைகர்ஸ் அணி வெற்றிக்கு 13 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன்பின் கேப்டன் மணிஷ் பாண்டே - மன்வந்த் குமார் கூட்டணி களமிறங்கியது. முதல் பந்திலேயே 2 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், 2வது பந்தில் பவுண்டரி விளாசப்பட்டது. பின்னர் அடுத்த 3 பந்துகளில் 3 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், கடைசி பந்தில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது.
கிராந்தி குமார் வீசிய பந்தில் மன்வந்த் குமார் பவுண்டரி அடித்து அசத்தினார். இதன் மூலமாக பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியை 3வது சூப்பர் ஓவர் முறையில் ஹூப்லி டைகர்ஸ் அணி வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெற்றது. ஐபிஎல் தொடரில் ஒருமுறை மும்பை - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2 சூப்பர் ஓவர்கள் வரை சென்றது. தற்போத்ய் மகாராஜா டிராபியில் 3வது சூப்பர் ஓவரை சென்றிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.