மேலும் ஒரு சாதனையை நோக்கி டோணி...!
பிர்மிங்காம்: இந்திய கேப்டன் டோணி மேலும் ஒரு சாதனைக்கு தயாராகி வருகிறார். இன்று பிர்மிங்காமில் நடைபெறும் 4வது ஒரு நாள் போட்டியில் அவர் களம் இறங்கும்போது இங்கிலாந்துக்கு எதிராக 25 போட்டிகளில் கேப்டனாக பணியாற்றிய பெருமையை அவர் பெறுவார்.
இது ஒரு புதிய இந்திய சாதனையாகும். மேலும் சர்வதேச அளவில் இங்கிலாந்துக்கு எதிராக 25 போட்டிகளுக்குத் தலைமை தாங்கிய 3வது கேப்டனாகவும் டோணி உருவெடுப்பார்.
இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் 26 போட்டிகளிலும், ரிக்கி பான்டிங் 30 போட்டிகளிலும் இங்கிலாந்துக்கு எதிராக கேப்டனாக இருந்துள்ளனர்.
இந்திய கேப்டன்கள் வரிசையில் டோணிதான் முதல் முறையாக அந்த சாதனையைப் புரிகிறார்.

ஆஸ்திரேலிய ஆதிக்கத்தை உடைத்து
இதுவரை ஆஸ்திரேலிய கேப்டன்கள்தான் இங்கிலாந்துக்கு எதிராக அதிக அளவிலான போட்டிகளில் கேப்டன்களாக இருந்துள்ளனர். அந்த ஆதிக்கத்தை முதல் முறையாக உடைக்கிறார் டோணி.

இன்னொரு சாதனையும்
அதேபோல இன்றைய போட்டியின் மூலம் அஸாருதீன் படைத்து வைத்துள்ள இன்னொரு சாதனையையும் டோணி எட்டவுள்ளார்.

3 அணிகளுக்கு எதிராக 25 போட்டிகளுக்கு மேல்
அஸாருதீன், நியூசிலாந்துக்கு எதிராக 25 போட்டிகள், பாகிஸ்தானுக்கு எதிராக 25, இலங்கைக்கு எதிராக 29 போட்டிகளுக்குக் கேப்டனாக இருந்துள்ளார்.

டோணி கணக்கு இது..
அதே சமயம், டோணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 32 போட்டிகள், இலங்கைக்கு எதிராக 41 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். தற்போது இங்கிலாந்துக்கு எதிராக 25வது போட்டியில் கேப்டனாக பணியாற்றவுள்ளார். இந்த வகையில் அவர் அஸாருதீனை மேலும் ஒரு முறை முந்துகிறார்.

ஏற்கனவே சாதனை சமன்
சமீபத்தில்தான் இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக அதிக வெற்றிகளைப் பெற்ற அஸாருதீன் சாதனையை சமன் செய்தார் டோணி என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications