பாவம் புள்ளைங்க டயர்டாயிட்டாடங்க... அடிலெய்ட் சொகுசு ரிசார்ட்டில் இந்திய வீரர்களுக்கு "ரெஸ்ட்"!!
அடிலைட்: முத்தரப்பு தொடரில் ஒரு போட்டியில் கூட வெல்லாமல் கேவலமாக தோற்ற நிலையில் தற்போது இந்திய வீரர்களுக்கு அடிலெய்ட் அருகே சொகுசு ரிசார்ட்டில் ஓய்வெடுக்க வசதி செய்து கொடுத்துள்ளதாம் இந்திய அணி நிர்வாகம்.
உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்கும் நாள் நெருங்கி விட்டதால் தோல்வியின் தாக்கத்திலிருந்து முழுமையாக விடுபட்டு புத்துணர்வுடன் இந்திய வீரர்கள் போட்டித் தொடர் சந்திப்பதற்காக இந்த ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாம்.
பிப்ரவரி 15ம் தேதி தனது முதல் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை சந்திக்கிறது. உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை இந்தியா, பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை என்பது முக்கியமானது.

பிரேக் அவசியம்
இந்திய வீரர்கள் தற்போது சோர்வடைந்துள்ளனர். களைப்பாக உள்ளனர். அவர்களுக்கு நல்லதொரு ஓய்வு தேவை. இதனால்தான் அடிலெய்ட் அருகே ரிசார்ட் புக் செய்து கொடுத்திருக்கிறோம் என்று இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு
அனைத்து வீரர்களும் தங்களது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டு நன்றாக ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். முழுமையாக மீண்டு வருமாறும் கேட்டுக் கொண்டுள்ளோம். வீரர்கள் தங்களுக்குப் பிடித்தமான ரிசார்ட்டைத் தேர்வு செய்து கொள்ள அவர்களிடமே சாய்ஸை விட்டு விட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மனைவி - காதலிகளுக்குத் தடை
ஏற்கனவே உலகக் கோப்பைப் போட்டித் தொடரின்போது வீரர்கள் தங்களது மனைவி மற்றும் காதலிகளுடன் தங்கக் கூடாது என்று கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. இதனால்தான் வீரர்களுக்குப் பிடித்தமான ரிசார்ட்டில் செலவு பார்க்காமல் தங்க வைத்துள்ளதாம்.

உறவினர்களைப் பார்க்க அனுமதி
அந்த அதிகாரி மேலும் கூறுகையில், சில வீரர்கள் தங்களது உறவினர்களைப் பார்க்க மெல்போர்ன், சிட்னி என போக விரும்பினர். அதை அனுமதித்துள்ளோம். யாராவது இந்தியாவுக்கு வந்து திரும்ப விரும்பினால் அதையும் கூட அனுமதிப்போம். இருப்பினும் அடியெல்டில் பிப்ரவரி 5ம் தேதி அனைவரும் கூட வேண்டும் என்பதால் அதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்றார்.

கங்குலி பேச்சுக்குப் பின்னர்
இந்திய வீரர்கள் சோர்வடைந்துள்ளனர். எனவே அவர்களுக்கு நல்ல பிரேக் தர வேண்டும் என்று சமீபத்தில் கங்குலி கூறியிருந்தார். இதையடுத்தே இந்த ஓய்வுத் திட்டத்தை வாரியம் கையில் எடுத்ததாக கூறுகிறார்கள்.

டோணியும் கூட
கேப்டன் டோணியும் கூட வீரர்களுக்கு பிரேக் தேவை என்று கூறியிருந்தார். இதையடுத்தே ஓய்வளிக்க வாரியம் தீர்மானித்ததாம்.
நல்லபடியாக ஆடி கோப்பையைத் தக்க வைத்துத் திரும்பினால் சந்தோஷம்தான்!


Click it and Unblock the Notifications