மும்பை: ஜிம்பாப்வே சுற்றுப் பயணத்தின்போது, இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் டோணி, புதிய மைல் கல் ஒன்றை தாண்ட வாய்ப்புள்ளது.
2004ல் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் தடம் பதித்த டோணி, இதுவரை 275 போட்டிகளில் ஆடி 8918 ரன்களை குவித்துள்ளார். இன்னும் 82 ரன்களை டோணி சேகரித்தால், அவர் 9 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்களுக்கான பட்டியலில் இடம்பெற முடியும்.

3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் என்பதால், அநேகமாக, இதில் டோணி அந்த மைல் கல்லை கடப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு டோணி 9 ஆயிரம் ரன்களை கடந்தால் அந்த சாதனையை செய்த 5வது இந்திய வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும்.
முதல் 4 இடங்களிலுள்ள இந்திய பேட்ஸ்மேன்களும், அவர்கள் குவித்த ரன்களும் இதுதான்.
சச்சின் டெண்டுல்கர்-18,426 (463 போட்டிகள்)
சவ்ரவ் கங்குலி- 11,363 (311 போட்டிகள்)
ராகுல் டிராவிட்- 10,889 (344 போட்டிகள்)
முகமது அசாருதீன்- 9378 (334 போட்டிகள்)