மெல்போர்ன்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திரசிங் டோணி அறிவித்துள்ளார். எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லி இந்தியாவுக்கு தலைமையேற்பார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் விளையாடிவருகிறது. காயம் காரணமாக முதல் போட்டியில் டோணி களமிறங்காததால் விராட் கோஹ்லி தலைமையில் இந்தியா களம் கண்டது. ஆனால் போராடி தோற்றது. 2வது மற்றும் இன்று நிறைவடைந்த மூன்றாவது டெஸ்டில் டோணி கேப்டனாக செயல்பட்டார். 2வது டெஸ்டில் இந்தியா தோற்ற நிலையில் 3வது டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது.

இந்த போட்டித்தொடரில் கோஹ்லி பேட்டிங்கில் ஜொலித்தார். ஆனால் டோணி சுத்தமாக ஏமாற்றிவிட்டார். முக்கியமான கட்டங்களில் குறைந்த ரன்களில் அவுட் ஆகி ரசிகர்களை கடுப்பேற்றினார். எனவே டோணிக்கு பதிலாக விராட் கோஹ்லி டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்க தொடங்கின. சவுரவ் கங்குலியும் இரு தினங்கள் முன்பு இதேயே வலியுறுத்தினார்.
இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக டோணி தெரிவித்ததாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. சிட்னியில் நடைபெற உள்ள கடைசி டெஸ்ட் போட்டியில் டோணிக்கு பதில் கோஹ்லி அணியை வழிநடத்துவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அதே நேரம் ஒருநாள் மற்றும் டி20க்கான இந்திய அணிக்கு டோணியே கேப்டனாக தொடருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
33வயதான டோணி, 90 டெஸ்டுகளில் விளையாடி 4876 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 33 அரை சதங்களும், 6 சதங்களும் அடங்கும். இதில் 60 டெஸ்டுகளில் டோணி கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதில் 27 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 15 போட்டிகள் டிரா ஆன நிலையில், 18 போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்துள்ளது. அதிக வெற்றிகளை ஈட்டிய இந்திய அணி கேப்டன் என்ற பெருமையும் டோணிக்கு உண்டு. டோணி கேப்டனாக இருந்தபோதுதான், டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் இந்தியா நம்பர்-1 இடத்தை பிடித்தது.

அதே நேரம் 2011 முதலே, வெளிநாட்டு போட்டிகளில் டோணி தலைமையிலான டெஸ்ட் அணி சறுக்கல்களை சந்திக்க தொடங்கியது. இக்காலகட்டத்தில் டோணி தலைமையில் 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்தியா, அதில் 15 போட்டிகளை தோற்றது. 6ல் மட்டுமே வெற்றி பெற்றது.