டெல்லி: டோணி தலைமையில் இந்திய அணி புதிய உச்சங்களை அடைந்தது. அவரது சாதனைகள் இந்திய கிரிக்கெட் வரலாற்று சாதனை பட்டியலில் எப்பொழுதும் தொடர்ந்து இருக்கும் என பி.சி.சி.ஐ.யின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து டோணி விலகியுள்ளார். அவர் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு கேப்டனாக பதவி வகித்து வந்த நிலையில் இந்த அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளார்.

டோணியின் திடீர் அறிவிப்பு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எனினும், இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டி தொடர்களுக்கான தேர்வில் அவர் இடம் பெறுவார் என பி.சி.சி. தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பி.சி.சி.ஐ.யின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி, இந்திய அணியின் எல்லா நிலைகளிலும் கேப்டனாக சிறந்த முறையில் தனது பங்கை ஆற்றியவர் டோணி. ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர் மற்றும் பி.சி.சி.ஐ.யின் சார்பில் டோணிக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
டோணி கேப்டனாக இருந்த போது இந்திய அணி புதிய உச்சத்தை அடைந்தது. அவரது சாதனைகள் இந்திய கிரிக்கெட் வரலாற்று சாதனை பட்டியலில் எப்பொழுதும் தொடர்ந்து இருக்கும் என கூறியுள்ளார்.