மும்பை : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்தத் தொடருக்கான அட்டவணை இதுவரை ஐசிசியால் அறிவிக்கப்படவில்லை.
இதற்கு காரணம் இந்தியாவும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரசியல் யுத்தம் தான் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் அணி இந்தியாவில் வந்து விளையாட தயக்கம் காட்டி வருகிறது.

இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய பிசிசிஐ பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை தென்னிந்தியாவில் நடத்த ஒப்புக்கொண்டது. இதனால் இந்தியாவுக்கு வருவது குறித்து உறுதி அளிக்குமாறு ஐசிசி கூறி இருந்தது. இந்த நிலையில் இதற்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தாங்கள் இந்தியாவுக்கு வருவதும் வராததும் எங்கள் நாட்டின் அரசு கையில் இருக்கிறது என்று கூறியுள்ளது.
எங்கள் நாட்டு அரசு வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு விளையாட அனுமதி தராமல் கூட போகலாம் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும் பாகிஸ்தானில் தற்போது நிலையான அரசு இல்லாததால் இப்போது அரசு அனுமதி அளித்தாலும் ஒருவேளை வேறு அரசு ஆட்சிக்கு வந்தால் அவர்கள் பாகிஸ்தான் அணிக்கு இந்தியா செல்ல அனுமதி தராமல் போகலாம் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் இந்தியா வந்து விளையாடுவதில் தங்களுக்கு சிக்கல் இருப்பதாகவும் உறுதியாக தற்போது வரை எதுவுமே கூற முடியாது என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அக்டோபர் மாதம் நடைபெறும் ஒரு விஷயத்திற்கு இப்போது முடிவு எடுப்பது சரியானதாக இருக்காது என்றும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இந்த பதிலால் ஐசிசி மற்றும் பிசிசிஐ க்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. உலகக்கோப்பை தொடருக்கு ஆறு முதல் 8 மாதங்கள் முன்பே அட்டவணையை வெளியிடுவது வழக்கம். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உறுதியான பதிலை ஏதும் அளிக்காததால் என்ன செய்வது என்று தெரியாமல் பிசிசிஐ முடிவெடுத்து வருகிறது. ஒருவேளை அட்டவணையை வெளியிட்ட பிறகு பாகிஸ்தான் அணி உலக கோப்பை தொடர்ந்து விலகினால் அது பெரும் நஷ்டத்தை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.