வட போச்சே... ஹாட்ரிக் விக்கெட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை வரை காத்திருக்கும் மலிங்கா!
மெல்போர்ன்: ஹாட்ரிக் விக்கெட்டுக்காக அடுத்த போட்டி வரை காத்திருக்கிறார் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லத்திஷ் மலிங்கா.
இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில், 333 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திச் சென்ற வங்கதேசம், 240 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அப்போது 47வது ஓவரை வீச வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா வரவழைக்கப்பட்டார்.

அந்த ஓவரின் 5வது பந்தில் ரகுமானுக்கு அவர் பவுன்சர் வீச, அது விக்கெட் கீப்பர் சங்ககாரா கைகளில் கேட்ச்சாக தஞ்சம் புகுந்தது. இதையடுத்து கடைசி விக்கெட்டாக தஸ்கின் அகமது களமிறங்கினார். அவருக்கு அடுத்த பந்தை வீசினார் மலிங்கா. அதுவும் தனது ஃபேவரைட் யார்க்கரை வீசினார். அந்த பந்து காலில் பழம்போல பட, எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார் தஸ்கின். எனவே அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய மலிங்கா, ஹாட்ரிக் வாய்ப்பை இப்போட்டியில் தவறவிட்டார்.
ஆனால் வரும் ஞாயிற்றுக்கிழமை, இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை மோத உள்ள போட்டியில், மலிங்கா தனது ஓவரின் முதல் பந்தில் விக்கெட்டை வீழ்த்தினால் அது ஹாட்ரிக்காகவே கருதப்படும். எனவே ஹாட்ரிக்கிற்காக இன்னும் 3 நாட்கள் காத்திருக்க வேண்டும் மலிங்கா.


Click it and Unblock the Notifications