
முன்னிலை
இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு டி20 போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் கிட்டத்தட்ட 70,000 பேர் முதல் 2 போட்டிகளிலும் பங்கேற்றனர். உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான இதில், 1,10,000 பேர் வரை அமரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுமதி ரத்து
ரசிகர்களின் உற்சாக குரலுடன் முதல் 2 போட்டிகளும் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் மீதமுள்ள 3, 4, 5வது போட்டிகளுக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என பிசிசிஐ அறிவித்தது. குஜராத் மாநிலத்தில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எனவே நோய் பரவலை தடுப்பதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், போட்டிக்கான டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணம் திருப்பி கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

போலீசாருக்கு தலைவலி
மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இங்கிலாந்து - இந்தியா தொடரை நிறுத்த ஒருவர் விபரீத முடிவை எடுத்துள்ளார். டி20 தொடரின் சிறப்பு காவல் அதிகாரியான கே.வி.பட்டேலுக்கு தொலைப்பேசியில் அழைத்த அந்த நபர் டி20 தொடரை நிறுத்த வேண்டும் எனவும் அப்படி இல்லையென்றால் தீக்குளிப்பேன் எனவும் மிரட்டியுள்ளார். மேலும் அவர் அம்மாநில முதல்வர் மற்றும் துணை முதல்வரையும் தரக்குறைவாக பேசியுள்ளார்.

தேடுதல் வேட்டை
இதனையடுத்து தேடுதல் வேட்டையில் இரங்கிய போலீசார், அந்த நபரின் செல்போன் எண்ணை வைத்து அந்த நபர் காந்தி நகரை சேர்ந்த பங்கஜ் பட்டேல் என கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலுக்கு இடையே இரு அணிகளும் மோதும் 4வது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications











