கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி, கேப்டன் கூல்' என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி மீது மீண்டும் ஒருமுறை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தனக்கு அணியில் நேர்ந்த அநீதி குறித்துப் பேசியுள்ள அவர், தனக்காக வீரேந்தர் சேவாக் செய்த தியாகத்தையும் வெளிப்படுத்தி, தோனியின் தலைமை குறித்த சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
மனோஜ் திவாரி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சேவாக் ஆற்றிய முக்கியப் பங்கு குறித்து அந்தப் பேட்டியில் பேசியுள்ளார். 2011-ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை நினைவுகூர்ந்த அவர், "அந்தத் தொடரில் இரட்டைச் சதம் அடித்திருந்த சேவாக், அடுத்த போட்டியில் தொடர்ந்து விளையாடி மேலும் ரன்களைக் குவித்திருக்க முடியும். ஆனால், எனக்கு அணியில் இழைக்கப்படும் அநீதியை அவர் உணர்ந்திருந்தார். அதனால், அவர் ஓய்வெடுத்துக்கொண்டு, ப்ளேயிங் லெவனில் எனக்காக ஒரு இடத்தைக் கொடுத்தார். அவர் ஒரு அற்புதமான மனிதர்" என்று கூறியுள்ளார்.

மேலும், "பஸ்ஸில் பயணம் செய்யும்போது, எந்த பேட்டிங் வரிசையில் ஆட விரும்புகிறாய்?' என்று சேவாக் என்னிடம் கேட்டார். நான், இந்திய அணிக்காக ஆடுவதே பெரிய கௌரவம், நீங்கள் எங்கு சொன்னாலும் ஆடுவேன்' என்றேன். ஆனால் அவரோ, இல்லை, நீ முதல் தரப் போட்டிகளில் எங்கு ஆடியிருக்கிறாய் என்று சொல்' என்றார். நான் நான்காவது வரிசை' என்றேன். சரி, அதுதான் உன் இடம், நீ அங்குதான் ஆடுவாய்' என்று உறுதியளித்தார்" என்று மனோஜ் திவாரி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
அந்தப் போட்டியில், சேவாக் இல்லாததால் கௌதம் கம்பீர் கேப்டனாக இருந்தார். அவரிடம், மனோஜ் திவாரியை 4-வது வரிசையில் ஆட வைக்க வேண்டும் என்று சேவாக் முன்பே கூறிவிட்டார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட மனோஜ் திவாரி, சதம் அடித்து ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
சதம் அடித்த பிறகும், தனக்கு அணியில் நிரந்தர இடம் கிடைக்காததற்கு தோனியே காரணம் என்று மனோஜ் திவாரி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். "சேவாக், சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் எனப் பல மூத்த வீரர்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர். ஆனால், முடிவெடுக்கும் இடத்தில் அவர்களுக்குக் குறைவான அதிகாரமே இருந்தது. அந்த நேரத்தில், முடிவெடுக்கும் ஒரே நபர் தோனி மட்டுமே. அவர் எனக்கு ஆதரவளிக்கவில்லை. வெளிநாட்டுப் பயிற்சியாளர்களும் இந்திய கேப்டனுடன் மோத விரும்ப மாட்டார்கள், ஏனென்றால் அது அவர்களுடைய வேலையைப் பாதிக்கும்" என்று கூறினார் மனோஜ் திவாரி.
சதம் அடித்த ஒரு வீரரை அடுத்தடுத்த போட்டிகளில் நீக்கியது, தோனியின் ஒருதலைப்பட்சமான முடிவுகளுக்கும், பாரபட்சத்திற்கும் ஒரு உதாரணம் என்று மனோஜ் திவாரி முன்பும் இந்த விவகாரம் பற்றி பலமுறை குற்றம் சாட்டியுள்ளார். திறமை இருந்தும், கேப்டனின் ஆதரவு இல்லாததால் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடங்கிப் போனதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.