வாய்ப்பு இல்லை
யுவராஜ் சிங் கடைசியாக 2017ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார். அதன் பின் பார்ம் அவுட் காரணமாக இந்திய அணியில் வாய்ப்பு பெறவில்லை. 2019 உலகக்கோப்பை தொடரில் இடம் பெற அவர் முயற்சி செய்தார்.
ஓய்வு
ஆனால், அவரது ஆசை நிறைவேறவில்லை. இதை அடுத்து அவர் 2019 உலகக்கோப்பை தொடர் நடந்து கொண்டு இருந்த போதே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பிசிசிஐ தனக்கு வாய்ப்பு வழங்க தயங்கியது குறித்து அப்போது கூறி இருந்தார்.
வாக்குறுதி அளித்த பிசிசிஐ
தான் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தால் அணியில் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால் தனக்கு கடைசியாக ஒரு வழியனுப்பு தொடர் மட்டும் தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும், தான் அதை ஏற்கவில்லை என்றும் பகிரங்க புகாரை கூறி இருந்தார்.
கேப்டன் சர்ச்சை
சமீபத்தில் அவர் சமூக வலைதளத்தில் தான் ஆடிய கேப்டன்களில் சௌரவ் கங்குலி அளவுக்கு வேறு எந்த கேப்டனும் தனக்கு ஆதரவு அளிக்கவில்லை எனவும் அதிரடியாக கூறி, தோனி, விராட் கோலியை குத்திக் காட்டி இருந்தார்.
தோனி மீது புகார்
யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் கடந்த ஆண்டு சில பேட்டிகளில் தோனியின் பெயரைக் குறிப்பிட்டே, அவர் தான் யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்காமல் செய்து விட்டார் என்றும், யுவராஜ் சிங்குக்கு கிடைக்க வேண்டிய கேப்டன் பதவியை தோனி பெற்றுக் கொண்டார் எனவும் அதிரடியாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
ஏ, பி, சி கூட தெரியாதவர்
இந்த நிலையில், தற்போது யோக்ராஜ் சிங், தன் மகன் யுவராஜ் சிங்கை தோனி, விராட் கோலி மட்டுமில்லாமல், தேர்வுக் குழுவில் இருந்த சிலரும் பழி வாங்கினார்கள் என கூறி உள்ளார். அதில் குறிப்பாக ஒருவரின் பெயரைக் கூறி, கிரிக்கெட்டின் ஏ, பி, சி கூட தெரியாத இவர் தேர்வுக் குழுவில் நியமிக்கப்பட்டார் என கடுமையாக சாடி உள்ளார்.
யுவராஜை பழி வாங்கினார்கள்
யுவராஜ் சிங்குக்கு வழியனுப்பும் வகையில் பிசிசிஐ எந்த ஏற்பாடும் செய்யாததையும் சுட்டிக் காட்டி விமர்சித்து இருந்தார். நியூஸ் 24 தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி - "அவர்கள் இருவருடன், தேர்வுக் குழுவினரும் யுவராஜை பழி வாங்கினார்கள் என நான் சொல்வேன். நான் சமீபத்தில் ரவியை பார்த்தேன். அவர் என்னிடம் போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்றார். நான் அவரிடம் அனைத்து பெரிய வீரர்களுக்கும் அவர்களின் செயல்பாட்டுக்கு ஏற்ப, வழியனுப்பும் போட்டிகள் நடத்த வேண்டும் என்றேன்"
வழியனுப்பும் போட்டி வேண்டும்
"தோனி, விராட் கோலி, ரோஹித் ஓய்வு பெறும் போது, அவர்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு நிறைய செய்துள்ளனர், அவர்களுக்கு வழியனுப்பும் போட்டி வேண்டும் என நான் கேட்பேன். நிறைய பேர் அவரை முதுகில் குத்தி விட்டார்கள் அது வலிக்கிறது" என கூறினார் யோக்ராஜ் சிங்.
தேர்வுக் குழு உறுப்பினர்
"இந்திய தேர்வுக் குழுவை சேர்ந்த ஷரன்தீப் சிங், (தேர்வுக் குழு) கூட்டங்களில், யுவராஜ் சிங்கை நீக்க வேண்டும் என தொடர்ந்து கூறுவதை வழக்கமாக கொண்டிருந்தார். கிரிக்கெட்டின் ஏ,பி,சி தெரியாதவர்கள் எல்லாம் தேர்வுக் குழுவல் நியமிக்கப்படுகிறார்கள்."
யுவராஜ் சிங் ஆடி விட்டால்..
"அவர்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்க முடியும். சிலர் நம்மை முதுகில் குத்தும் போது நமக்கு வலிக்கிறது. எல்லோருக்கும் யுவராஜ் சிங் தொடர்ந்து சிறப்பாக ஆடி விட்டால் நம் நிலைமை என்ன ஆவது என்ற கவலை இருந்தது." என்றார் யோக்ராஜ் சிங். அவர் தேர்வுக் குழு உறுப்பினர் பெயரைக் கூறி இப்போது புகார் கூறி இருப்பதால் பரபரப்பு எழுந்துள்ளது.