
கோலியின் காத்திருப்பு
இந்த முறை இந்திய அணியின் நாயகனகாக அனைவரின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருப்பது விராட் கோலி தான். ஏனென்றால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவது என்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவது போன்று இருக்கும். இதுவரை அந்த அணிக்கு எதிராக 7 சதங்களை அடித்துள்ளார். அதுவும் இந்த முறை சொந்த மண்ணில் நடப்பதால் என்ன செய்யப்போகிறாரோ என உச்சகட்ட எதிர்பார்ப்பு உள்ளது.

ஸ்டோய்னிஸ் கருத்து
இந்நிலையில் கோலி குறித்து மார்கஸ் ஸ்டோய்னிஸ் அச்சம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கிரிக்கெட் வரலாற்றிலேயே விராட் கோலியும் ஒரு பெரும் வீரர். அவர் தற்போது உள்ள வயதிற்கும், கிரிக்கெட்டில் பெற்றுள்ள புகழுக்கும் இந்த தொடரை எப்படியாவது பயன்படுத்திக்கொள்ள நினைப்பார். சிறந்த வீரர்கள் எப்போதுமே, மிகச்சிறந்த தொடர்களை தான் ரன் குவிக்க பயன்படுத்துவார்கள்.

எச்சரிக்கை மணி
டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி ஆடிய ருத்ர தாண்டவத்தை நாம் பார்த்தோம். அதீத ரன் பசியில் இருக்கிறேன் என்ற எச்சரிக்கை மணி அது. இந்த தொடரில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளக்கூடிய ஒரு வீரராக கோலி இருப்பார். அவரை விட சிறப்பாக செயல்பட்டாக வேண்டிய சூழலில் நாங்கள் இருக்கிறோம். அவரை சமாளிக்க காத்துக்கொண்டுள்ளோம் என ஸ்டோய்னிஸ் கூறியுள்ளார்.

கோலியின் ரெக்கார்ட்
ஸ்டோய்னிஸ் கூறியதை போல கோலிக்கு இது பெரிய வாய்ப்பாகும். ஏனென்றால் டி20 மற்றும் 50 ஓவர் கிரிக்கெட்டில் சதம் அடித்த கோலி இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தாக்கம் ஏற்படுத்தவில்லை. கடைசியாக 2019ம் ஆண்டு சதமடித்திருக்கிறார். எனவே இந்த தொடரில் தனது ஃபார்மை காட்டி சதமடித்துவிட்டால் ரசிகர்களின் மனதில் இருந்த மற்றொரு ஏக்கமும் தீர்ந்துவிடும்.


Click it and Unblock the Notifications