
பவுச்சர் தலைமையில் வெற்றி
பவுச்சர் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் தலைமை பயிற்சியாளராக பதவியில் அமர்ந்தார். மார்க் பவுச்சர் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணி 11 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றது. மேலும் இந்தியாவுக்கு எதிராக இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தங்களது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றனர்.

இங்கிலாந்துடன் தோல்வி
2021 டி20 உலக கோப்பை அரையிறுதி வரை தென்னாப்பிரிக்கா அணி தகுதி பெற்றது. தற்போது உள்ள ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. இப்படி பவுச்சர் வழிகாட்டுதலில் பல்வேறு வெற்றிகளை தென்னாப்பிரிக்கா அணி பெற்று வந்தது. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.

விலகலுக்கு காரணம்
இதனை அடுத்து தாம் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பவுச்சர் பதவி விலக காரணம் தென்னாப்பிரிக்காவில் அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல் பாணியில் டி20 போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் எம்.ஐ கேப்டவுன் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பவுச்சர் பணியில் சேர இருக்கிறார். இதனால் தான் தென்னாப்பிரிக்கா பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து பவுச்சர் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய பயிற்சியாளர் யார்
மார்க் பவுச்சரின் இந்த முடிவு தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தென்னாபிரிக்க அணிக்காக அவர் செய்த நல்ல விஷயங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளது. தென்னாப்பிரிக்க அணி கடுமையான சூழலில் சிக்கிக் கொண்டிருந்தபோது அணியை கரை சேர்த்தவரின் பவுச்சரும் ஒருவர் என்று அந் நாட்டு கிரிக்கெட் வாரியம் பாராட்டியுள்ளது. இந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்காவுடன் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கும் பொறுப்பில் தற்போது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இறங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











