சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய கேப்டன் விராட் கோலியை, இங்கிலாந்து ஸ்பின்னர் டோமினிக் பெஸ் வீழ்த்தியது குறித்து மார்க் பட்சர் விளக்கியுள்ளார்.

சென்னை சேப்பாக் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 337 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இறுதிக் கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் 85 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அஷ்வினும் தன் பங்குக்கு 31 ரன்கள் எடுக்க, பாலோ ஆன் தவிர்த்தது இந்தியா.
முன்னதாக, பண்ட் 91 ரன்களும், புஜாரா 73 ரன்களும் எடுத்திருந்தனர். ஆனால், ரோஹித் 6, ரஹானே 1, கேப்டன் கோலி ஆகியோர் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதில், புஜாரா, கோலி, ரஹானே, பண்ட் ஆகிய நான்கு பேட்ஸ்மேன்களை காலி செய்தவர் இங்கிலாந்து ஆஃப் ஸ்பின்னர் டோமினிக் பெஸ். குறிப்பாக, கோலியை சொல்லி வைத்து ஜோலியை முடித்தார்.
ஆஃப் ஸ்டெம்ப்புக்கு வெளியே வந்த பந்தை கோலி டிஃபன்ட் செய்ய முயல, அது அவரது பேட் ஹேண்டிலில் பட்டு எட்ஜ் ஆகி, லெக் ஸ்டெம்ப்புக்கு அருகில் பக்காவாக நிற்கவைக்கப்பட்ட ஓலே போப் கைகளில் தஞ்சமடைந்தது.
இந்த விக்கெட் குறித்து வர்ணித்த முன்னாள் இங்கிலாந்து வீரர் மார்க் பட்சர், "கோலியை நோக்கி மெதுவாக பயணித்த அந்த பந்து உண்மையில் சற்று திரும்பியது. கோலியை எப்போதும் அமைதியாக வைத்திருப்பது முக்கியமானது. மெதுவாக வந்த பந்து சிறிது டர்னுடன், கொஞ்சம் பவுன்ஸ் ஆனதால், கோலி அந்த பந்தை தொட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மிச்சத்தை ஓலே போப் பார்த்துக் கொண்டார்.
டோமினிக் பெஸ் சந்தித்த அருமையான தருணம் அது. அவர் மென்மேலும் தன்னை மேம்படுத்திக் கொண்டே செல்கிறார். அவரிடம் ஒரு சிறப்பம்சம் உள்ளது. ஒரு தீப்பொறி அவரிடம் காணமுடிகிறது. மிக விரைவாக கற்றுக் கொள்கிறார்" என்று பாராட்டியுள்ளார்.