சிட்னி : ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மார்ஷ் உள்ளூர் ஒருநாள் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது.
நியூசவுத்வேல்ஸ் - டாஸ்மேனியா இடையே ஆன போட்டி கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ்மேனியா முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணி இந்த சீசனின் நான்காவது போட்டியில் களமிறங்கியது. துவக்க வீரர் காலெப் ஜூவேல் மூன்றாவது பந்திலேயே டக் அவுட் ஆனார். அதன் பின் 20வது ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 57 ரன்கள் மட்டுமே எடுத்தது அந்த அணி.

பின் வெப்ஸ்டர் 65, பாட்ரிக் 39 ரன்கள் சேர்க்க அந்த அணி 198 ரன்கள் எடுத்தது. இந்த சிறிய இலக்கை நோக்கி ஆடிய நியூசவுத்வேல்ஸ் அணி வேகமாக ரன் சேர்த்து ஆடியது.
அந்த அணியின் எட்வர்ட்ஸ் அதிரடி ஆட்டம் ஆடி 92 ரன்களும், அவருடன் ஹ்யூக்ஸ் 58 ரன்களும் குவித்தனர். அவர்கள் ஆடிய போது முதல் ஓவரிலேயே அந்த விசித்திர சம்பவம் நடந்தது.
ஹியூக்ஸ் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ரிலே மெரிடித் பந்து வீசினார். அப்போது பந்தை எட்ஜ் செய்தார் ஹியூக்ஸ். விக்கெட் கீப்பர் பந்தை கேட்ச் பிடிக்கவே அம்பயரும் அவுட் கொடுத்து விட்டார்.
ஆனால், அம்பயர் அவுட் கொடுக்கும் அதே நொடியில், கீழே கைக்குட்டை விழுந்து விட்டதை சுட்டிக் காட்டினார். பந்துவீச்சாளர் மெரிடித்தின் கைக்குட்டை அவரது பேன்ட்டில் இருந்து கீழே விழுந்து விட்டது.
அதனால் தான் பந்தை சரியாக கவனிக்கவில்லை என்பதே ஹியூக்ஸ்-இன் வாதம். அதை ஏற்றுக் கொண்ட கள அம்பயர், மற்றொரு அம்பயருடன் பேசி அவருக்கு அவுட் கொடுத்ததை திரும்ப பெற்றார். மேலும், பேட்ஸ்மேன் பந்தை பார்க்க முடியாததால் அந்த பந்தையும் "டெட் பால்" என அறிவித்தார் அம்பயர். நியூ சவுத்வேல்ஸ் அணி இந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த சம்பவம் குறித்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.