
வங்கதேச கேப்டன் மொர்டாசா
வங்கதேச அணியின் கேப்டனாக பல ஆண்டுகளாக இருத்த மஷ்ராபே மொர்டாசா கடந்த ஆண்டு அணியில் இருந்து விலகினார். அவருக்கு அடுத்த தலைமுறை வங்கதேச அணி தற்போது உருவாகி உள்ளது. தமிம் இக்பால் தற்போது ஒருநாள் அணியின் கேப்டனாக பதவி ஏற்றுள்ளார்.

கேப்டன்கள் சந்திப்பு
முன்னாள் கேப்டனும், தற்போதைய கேப்டனும் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் முன் பேசிக் கொண்டனர். அதில் மக்மதுல்லா குறித்தும், 2007 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தியது பற்றியும் பேசினர். மேலும், தமிம் இக்பாலுக்காக ஒருமுறை மொர்டாசா பதவி விலகுவதாக கூறிய சம்பவத்தையும் நினைவு கூர்ந்தனர்.

ஆல் ரவுண்டர் மக்மதுல்லா
வங்கதேச அணியின் ஆல் ரவுண்டராக கடந்த 2007இல் இருந்து ஆடி வருகிறார். இவர் ஒருநாள் அணியில் மிடில் ஆர்டரில் நீண்ட காலமாக பேட்டிங் செய்து வருகிறார். மொர்டாசாவின் ஓய்வுக்குப் பின் டி20 அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்மதுல்லா - விவிஎஸ் லக்ஷ்மன்
அவரைப் பற்றி கூறுகையில், "மக்மதுல்லா விவிஎஸ் லக்ஷ்மன் போன்றவர். அவர் பல நாள் ரன் எடுக்காமல் இருப்பார். ஆனால், அணிக்கு எப்போது தேவையோ அப்போது அவர் எழுந்து நிற்பார்." என இந்திய ஜாம்பவான் லக்ஷ்மனுடன் ஒப்பிட்டு பாராட்டி பேசினார்.

பேட்டிங் ஜாம்பவான் ஆகி இருப்பார்
மேலும், "மக்மதுல்லாவுக்கு நான்காம் வரிசையில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்து இருந்தால் அவர் பெரிய பேட்டிங் ஜாம்பவானாக மாறி இருப்பார். அவரிடம் அதிரடி ஆட்டம் ஆடும் திறன் இருந்ததால், அணிக்காக அவர் ஆறாம் வரிசையில் பேட்டிங் செய்தார்." என்றார்.

புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார்
"நான் எப்போதும் அவருக்காக வருத்தப்பட்டது உண்டு. ஆனால், அவர் அந்த சூழ்நிலையை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார்" என மக்மதுல்லாவின் தியாகத்தை பற்றிக் கூறி நெகிழ்ச்சி அடைந்தார் மஷ்ராபே மொர்டாசா. அடுத்து 2007இல் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தியது பற்றி பேசினார்.

இந்தியாவை வீழ்த்திய சம்பவம்
தமிம் இக்பால் அந்த போட்டி குறித்து முக்கிய கேள்வி ஒன்றை கேட்டார். "அந்தப் போட்டிக்கு பத்து நாட்கள் முன்னரே சேவாக்கை இன்-கட்டர் வீசி பவுல்டு ஆக்குவேன் என்றீர்கள். அது எப்படி உங்களுக்கு முன்பே தெரியும்?" எனக் கேட்டார் தமிம்.

இதுதான் காரணம்
அது பற்றி மஷ்ராபே மொர்டாசா கூறுகையில், "சில சமயம் இது நமது நாள் என தோன்றும். அந்த உலகக்கோப்பைக்கு முன் சக வீரர் மஞ்சுரல் ராணா விபத்தில் உயிரிழந்து இருந்ததால் அணி ஒரு வேகத்தில் இருந்தது. அவருக்காக அந்த போட்டியை வெல்ல வேண்டும் என நினைத்தோம்" என்றார்.

நீக்கினால் பதவி விலகுவேன்
அடுத்து தமிம் இக்பால் தனக்காக மஷ்ராபே மொர்டாசா பதவி விலகுவதாக சண்டை போட்ட சம்பவத்தை நினைவு கூர்ந்தார். தான் ஒருநாள் மோசமாக ஆட்டமிழந்து அறைக்கு வந்த போது, சிலர் அடுத்த போட்டியில் தன்னை அணியில் சேர்க்க வேண்டாம் என கூறியதாகவும், அப்போது மொர்டாசா, அது மட்டும் நடந்தால் நான் பதவி விலகி விடுவேன் எனக் கூறியதை விவரித்தார்.


Click it and Unblock the Notifications











