கான்பூர்: குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில், டெல்லி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது.
கான்பூரில் நேற்று இரவு நடைபெற்ற ஐ.பி.எல். 50வது லீக் போட்டியில், குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்று பீல்டிங் தேர்ந்தெடுத்தது டெல்லி. இதையடுத்து களமிறங்கிய குஜராத் லயன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்தது.

குஜராத் அணியில் அதிகபட்சமாக பின்ச் 39 பந்துகளில் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகள் என 69 ரன்கள் குவித்தார். தினேஷ் கார்த்திக் 40 ரன்களும், இஷான் கிஷன் 34 ரன்களும் குவித்தனர். டெல்லி தரப்பில் ஷமி, கம்மின்ஸ், அமித் மிஷ்ரா, பிரெத்வெயிட் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதன் பின்னர் 196 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது டெல்லி. ஓபனிங் பேட்ஸ்மேனாக எஸ்.வி. சாம்சன் (10), கே.கே. நாயர் (30) ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய ரிஷப் பந்த் 4 ரன்களில் நடையை கட்டினார். அடுத்து வந்த எஸ்.எஸ். ஐயர் துவக்கம் முதலே அதிரடி காட்டினார்.
அவர் 57 பந்துகளில் 96 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஷமி 4 ரன்களுடனும், அமித் மிஸ்ரா 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். டெல்லி டேர்டெவில்ஸ் அணி 19.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.