மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பயன்படுத்தி, தனது நாட்டின் வர்த்தகத்தை பெருக்கிக்கொள்ள ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ம்தேதி முதல் மார்ச் 29ம்தேதிவரையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வைத்து நடைபெற உள்ளது. இதையொட்டி 'மேட்ச் ஆஸ்திரேலியா ஸ்போர்ட்ஸ் பிசினஸ் புரோக்ராம்' என்ற திட்டத்தை ஆஸ்திரேலிய அரசு துவக்கியுள்ளது.

கிரிக்கெட் போட்டிகளை பயன்படுத்தி தனது நாட்டு வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, சர்வதேச கல்வி துறைகளில் அதிக முதலீடுகளை ஈர்க்க இந்த திட்டம் உதவும். ஆஸ்திரேலிய வர்த்தக துறை அமைச்சர் ஆன்ட்ரியூ ரோப் நிருபர்களிடம் கூறுகையில், "இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகளிலுள்ள முதலீட்டு வாய்ப்புகளை ஆஸ்திரேலியாவுக்கு ஈர்க்க கிரிக்கெட்டை பயன்படுத்த உள்ளோம்.
அடுத்த ஆண்டின் மிகப்பெரிய விளையாட்டு தொடராக உலக கோப்பை கிரிக்கெட் அமைய உள்ளது. உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினர் இந்த போட்டிகளை கண்டு களிக்க உள்ளனர். மக்களோடு மக்களை இணைக்க கிரிக்கெட் ஒரு அருமையான வாய்ப்பு" என்றார்.