சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளராக இருக்கும் மதீஷா பதிரானா தோனி பற்றி உருக்கமாக பேசிய வீடியோ ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் மதீஷா பதிரானாவின் பெற்றோரும் தோனி குறித்து பேசி உள்ளனர். அதில் தோனியை கடவுள் என்றும், இந்தியாவில் அவர் தான் தங்களது மகனின் தந்தை என்றும் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 2022 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்து ஆடி வருகிறார் மதீஷா பதிரானா. இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்த அவர் லசித் மலிங்காவை பின்பற்றி அதே போன்ற முறையில் பந்து வீசி வந்தார். ஆனால், சர்வதேச அரங்கில் அவர் அதிக முக்கியத்துவம் பெறவில்லை.

அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் நேரடி கண்காணிப்பில் பதிரானா பட்டை தீட்டப்பட்டார். அப்போது முதல் அவரது பௌலிங் தாக்கம் பல மடங்கு அதிகரித்தது. அதன் பின் அவர் சிஎஸ்கே அணியில் ஒரு குடும்ப உறுப்பினரை போலவே மாறிவிட்டார். தொடர்ந்து ஏலத்தின் போது அவரை விடுவிக்காமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தக்க வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் சமூக வலைதள பக்கத்தில் மதீஷா பதிரானாவின் பெற்றோர் அளித்த பேட்டி வெளியிடப்பட்டு உள்ளது. அதில், "தோனியை பற்றி சொல்ல வார்த்தையே இல்லை. அவர் உண்மையில் கடவுள். மதீஷா எப்படி அவனது தந்தையை மதிக்கிறாரோ அதே அளவுக்கு தோனியையும் மதிக்கிறான்" என்று கூறி இருக்கிறார் பதிரானாவின் தாயார்.
"இலங்கையில் நான் அவனுக்கு அப்பா, இந்தியாவில் தோனி தான் அவனுக்கு அப்பா" என்று கூறி இருக்கிறார் பதிரானாவின் தந்தை. இது குறித்து மதீஷா பதிரானா பேசுகையில், "நான் தோனியை ஒரு தந்தையின் இடத்தில் வைத்து தான் பார்க்கிறேன். அவர் கிரிக்கெட்டில் எனக்கு நிறைய விஷயங்களை ஒரு தந்தையை போல செய்து இருக்கிறார். வீட்டில் எனது தந்தை எனக்கு எந்த அளவுக்கு ஆதரவு அளித்தாரோ அதேபோல கிரிக்கெட்டில் அவர் எனக்கு ஆதரவு அளித்து இருக்கிறார்" என்றார்.
மதீஷா பதிரானா சிஎஸ்கே அணிக்காக இதுவரை 22 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் 39 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அவரது எகானமி 7.88 ஆகும். அவரது சிறந்த பந்துவீச்சு 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஆகும்.
2023 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை வென்றதில் மதீஷா பதிரானாவின் பங்கு மிகவும் அதிகம். அப்போது அவர் 12 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 2024 ஆம் ஆண்டில் பதிரானாவால் முழு அளவில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியவில்லை.
மதீஷா பதிரானா 2024 ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடினாலும் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி முக்கியமான பந்துவீச்சாளராக இருந்தார். 2022 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியில் ஆடம் மில்னே காயம் அடைந்ததால் ஒரு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரை தேர்வு செய்ய வேண்டும் என்ற நிலையில் தான் மதீஷா பதிரானாவை சிஎஸ்கே அணி தேர்வு செய்தது. அவரை ஏலத்தில் கூட வாங்கவில்லை. அப்படி தேர்வு செய்யப்பட்ட மதீஷா பதிரானா தற்போது சிஎஸ்கே அணியில் பிரிக்க முடியாத குடும்ப உறுப்பினராக இருக்கிறார்.
அப்போது மதீஷா பதிரானா 19 வயது வளர்ந்து வரும் பந்துவீச்சாளராக இருந்தார். அவரது பௌலிங் முறை லசித் மலிங்காவை பின்பற்றுவதாக இருந்ததால் அவரை பேபி மலிங்கா என்று தான் அழைத்தார்கள். அதன் பின்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவரது திறமை பட்டை தீட்டப்பட்டது. 2023 ஐபிஎல் தொடருக்கு பிறகு அவர் இலங்கை அணியிலும் முக்கிய பந்துவீச்சாளராக மாறினார்.
அப்போதைய சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி அவரது நேரடி கண்காணிப்பில் பதிரானவுக்கு பல்வேறு ஆலோசனைகளை அளித்தார். மலிங்கா எப்படி தனித்துவமான பந்துவீச்சாளராக இருந்தாரோ அவரது பாதையில் இவர் வருவதற்கான அத்தனை சாத்திய கூறுகளும் உள்ளது என்பதை அறிந்த தோனி அவரது திறமையை வெளிப்படுத்த உதவினார்.
தோனி அப்போது கேப்டனாக இருந்த நிலையில் பதிரானவுக்கு பவர் பிளே ஓவர்களிலும், கடைசி நேர டெத் ஓவர்களிலும் பந்து வீச வாய்ப்பு அளித்து இருந்தார். தன் மீதான நம்பிக்கையை பதிரானாவும் காப்பாற்றினார். அதன் பிறகு மதீஷா பதிரானா இலங்கை அணியில் முக்கியத்துவம் பெற்ற நிலையில் இலங்கை டெஸ்ட் அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உருவானது.
ஆனால், அப்போது தோனி அவருக்கு ஒரு முக்கிய ஆலோசனையை அளித்ததாக சொல்லப்பட்டது. மதீஷா பதிரானாவின் பௌலிங் முறையானது அதிக நேரம் வீசுவதற்கு ஏற்றதாக இருக்காது என்பதால் டெஸ்ட் போட்டிகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டாம் என்றும், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் அதிக கவனம் செலுத்துமாறு தோனி அப்போது ஆலோசனை அளித்ததாக சொல்லப்பட்டது.
அதை ஏற்று பதிரானாவும் இப்போது உள்ளூர் டெஸ்ட் போட்டிகளிலும் அதிக அளவில் விளையாடுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படும் என்பதால் தொலைநோக்கு பார்வையுடன் தோனி இந்த ஆலோசனை அளித்து இருக்கிறார். இதைத்தான் ஒரு தந்தையின் அக்கறை என பதிரானா தற்போது பேட்டியிலும் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்ந்த போது மதீஷா பதிரானாவிடம் இருந்த பௌலிங் வியூகங்கள் மற்றும் உத்திகளை விட தற்போது அதிக பௌலிங் வியூகங்கள் மற்றும் உத்திகளை அவர் கையாண்டு வருகிறார். உதாரணத்திற்கு யார்க்கர் பந்துகளில் மட்டுமே பல்வேறு விதமான யார்க்கர்களை அவர் வீசுகிறார். மேலும், ஸ்லோ பந்துகளையும் வீசுகிறார்.
எதிரணியின் விக்கெட்டை வீழ்த்துவதோடு ரன்களை கட்டுப்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்துகிறார். அங்குதான் அவர் ஒரு சிறந்த டி20 பந்துவீச்சாளராக தன்னை மெருகேற்றி இருக்கிறார். தோனி கேப்டனாக இருந்தபோது சிஎஸ்கே அணியில் இடம்பெற்ற பதிரானா தற்போது ருதுராஜ் கெய்க்வாட்டின் கேப்டன்ஸியிலும் அதே முக்கியத்துவத்துடன் இருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிகாரம் அங்குமிங்கும் மாறினாலும் மதீஷா பதிரானாவின் முக்கியத்துவம் மாறவில்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.