துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியின் முதன்மை வேகப்பந்துவீச்சாளர் மேட் ஹென்றி கண்ணீர் மல்க ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடைபெற்றது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய இந்த இறுதிப் போட்டியில், மேட் ஹென்றிக்கு நியூசிலாந்து அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் நாதன் ஸ்மித் பிளேயிங் லெவனில் இடம் பெற்றார்.

இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடியது. அப்போது வேகப்பந்துவீச்சாளர் மேட் ஹென்றிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதனால் அவர் வலியால் துடித்தார். அந்தப் போட்டிக்கு பிறகு அவர் எப்படியும் இறுதிப் போட்டிக்கு முன் தயாராகி விடுவார் என்று நியூசிலாந்து அணி நிர்வாகம் எதிர்பார்த்தது.
ஆனாலும், அவர் முழு உடல் தகுதி பெறவில்லை. இதை அடுத்து வேறு வழியின்றி, இந்திய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் மேட் ஹென்றிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக இளம் வேகப்பந்துவீச்சாளர் நாதன் ஸ்மித் இடம் பெற்றார்.
டாஸ் போடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, கடைசி முயற்சியாக மேட் ஹென்றி பந்துவீசி பயிற்சி செய்தார். அப்போதும் அவருக்கு தோளில் வலி இருந்தது. இதை அடுத்து அவர் சோர்வுடன் காணப்பட்டார். அணி நிர்வாகம் அவரை நீக்க முடிவு செய்தது. இந்த விஷயத்தை நியூசிலாந்தின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட், மேட் ஹென்றியிடம் தெரிவித்தார்.
அப்போது 33 வயதான மேட் ஹென்றி கண்ணீருடன் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். பயிற்சியாளர் கேரி ஸ்டெட் அவரை தேற்றுவதற்கு முயற்சி செய்தார். இந்த வீடியோ காட்சி நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பின்னர் நடைபெற்ற போட்டியில், நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது.