சென்னை: முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவானுமான மேத்யூ ஹைடன், தோனி சிஎஸ்கேவை விட்டு விலகி ஓய்வு பெற்று, அடுத்த போட்டியிலிருந்து வர்ணனை செய்ய வர வேண்டும் என கூறியிருக்கிறார். அவரது இந்த விமர்சனம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
2025 தொடரில் தோனி இதுவரை ஆடிய நான்கு போட்டிகளிலும் அணியின் வெற்றிக்காக அதிரடியாக விளையாடவில்லை என்ற விமர்சனம் உள்ளது. அவரால் நீண்ட நேரம் பேட்டிங் ஆட முடியவில்லை என்பது ஒரு புறம் இருக்க, இப்போது அதிரடியாக ஆட வேண்டிய சந்தர்ப்பங்களிலும் அவர் மிகவும் நிதானமாக விளையாடி வருகிறார். அது விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் மந்தமாக விளையாடி இருந்தார். பல பந்துகளை வீணடித்தார். 19 பந்துகள் வரை ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. இதை அடுத்து தோனி ஓய்வு பெற வேண்டுமென பரவலாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன.
இந்த நிலையில் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான மேத்யூ ஹைடன் அதிரடியாக தோனி ஓய்வு பெற வேண்டும் என நேரடியாக கூறியிருக்கிறார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக சேஸிங் செய்ய வேண்டிய சூழ்நிலையில் தோனி மிகவும் நிதானமாக ஆடி வந்தார்.
அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்த மேத்யூ ஹைடன், "இந்த போட்டிக்குப் பிறகு தோனி வர்ணனையாளர்கள் குழுவுடன் இணைய வேண்டும். அவர் கிரிக்கெட்டை தொலைத்து விட்டார். இனி அவ்வளவுதான். இந்த உண்மையை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலக வேண்டிய காலம் எப்போதோ வந்துவிட்டது" என்றார்.
இந்த நேரடி விமர்சனம் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. எனினும் தோனி ஓய்வு பெறப்போவதில்லை என சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டியை பார்ப்பதற்கு தோனியின் பெற்றோர் நேரில் வந்திருந்தனர்.
இதுவரை அவர்கள் தோனி விளையாடிய போட்டியை நேரில் பார்த்ததில்லை என்பதால் அவரது கடைசி போட்டியாக இது இருக்குமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. ஆனால், ஸ்டீபன் பிளமிங் அதுபோல எதுவும் இல்லை என விளக்கம் அளித்தார்.