மெல்போர்ன் : அல்-ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்ட ஒரு ஆவணப்படத்தில், இந்தியாவுக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஆடிய ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இரண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஸ்பாட் பிக்ஸிங்கில் (Spot Fixing) ஈடுபட்டதாக கூறப்பட்து உள்ளது. இங்கிலாந்து- இந்தியா இடையிலான 2016 சென்னை டெஸ்ட் போட்டியில் மூன்று இங்கிலாந்து வீரர்கள் இதே குற்றத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டு உள்ளது. குறைந்த ரன் ரேட்டில் ரன்களை எடுக்குமாறு அந்த வீரர்களிடம் பிக்ஸிங் செய்பவர்கள் கேட்டுக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. நேரடியாக வீரர்களின் பெயர்கள் குறிப்பிடவில்லை என்றாலும், அந்த ஆவணப்படத்தில் எந்த நேரத்தில் ஸ்பாட் பிக்ஸிங் மூலம் குற்றம் நடந்தது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் ஒரு வீரர் யார் என்பது மட்டும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த ஆவணப்படத்தின் ஒரு பகுதியில், அவர்கள் மறைமுகமாக ஆஸ்திரேலியா அணியின் மாக்ஸ்வெல் மீது குற்றச்சாட்டு வைப்பதாக தெரிகிறது. இதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ள மாக்ஸ்வெல், இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு என தெரிவித்து உள்ளார். மேலும், இந்த தவறான புகாரால், தான் மிகவும் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். அந்த ராஞ்சி டெஸ்டில் தான் மாக்ஸ்வெல் தன் முதல் சதத்தை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி ஆஸ்திரேலியாவின் சென் ரேடியோவிற்கு அளித்த பேட்டியில், ldquo;நான் மிகவும் அதிர்ச்சி அடைந்து, காயமடைந்து இருக்கிறேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஞாபகங்களையும், சிறப்பான ஆட்டத்தின் நினைவுகளையும் வழங்கிய ஒரு போட்டியின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. என் முதல் சதத்தை அடித்தவுடன் ஸ்டீவ் ஸ்மித்தை கட்டிப் பிடித்து என் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது, இன்னும் என் நினைவில் இருக்கிறது rdquo; என்று கூறினார். மேலும் ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் பற்றிய தன் சந்தேகங்களை அனைத்தையும் தான் புகார் செய்ததாக தெரிவித்தார். இந்த புகார் குறித்து, ஐசிசி குற்றத் தடுப்பு பிரிவு முழு அளவில் தன் விசாரணையை செய்து வருகிறது. அதே போல, இந்த விவகாரம் குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா, பிசிசிஐ மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு ஆகியோரும் விசாரித்து வருகின்றனர். அல்-ஜசீரா தொலைக்காட்சியிடம் ஐசிசி, அந்த ஆவணப்படத்தின் முழு வடிவத்தையும் வழங்குமாறு கேட்டு இருக்கின்றனர். ஆனால், அல்-ஜசீரா இன்னும் அந்த ஆவணப்படத்தின் முழு காட்சிகளை வழங்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும், முழு வடிவத்துடன் ஆவணப்படத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.