மேற்கு வங்கம், ஒடிசா பாதிப்பு
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடே அசாதாரணமான சூழலில் உள்ளது. இந்நிலையில், மேலும் துயரம் கொடுக்கும் நிகழ்வாக ஆம்பன் புயல் தலைவிரித்தாடுகிறது. இதுவரை இல்லாத அளவில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் மிகப்பெரிய பாதிப்பை இந்த புயல் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கோரிக்கை
இந்த புயல் இதுவரை இல்லாத அளவில் மேற்குவங்கத்தை அதிகமாக பாதித்துள்ளதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். புயல் பாதிப்பில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள சூழலில் இந்த புயலின் பாதிப்பிலிருந்து மீண்டுவர ஒரு லட்சம் கோடி ரூபாய் நிவாரண உதவி தேவைப்படும் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கடவுள் காப்பாற்றுவார்
இந்நிலையில், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தான் பிரார்த்தனை மேற்கொள்வதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் கடவுள் காப்பாற்றுவார் என்று தெரிவித்துள்ள கோலி, அங்கு விரைவில் இயல்புநிலை திரும்பும் என்றும் கூறியுள்ளார்.
பாதுகாப்பாக இருக்க கோரிக்கை
இதேபோல இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தித்துள்ளார். ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் உள்ளவர்களின் பாதுகாப்புக்காக தான் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஹர்பஜன் சிங்கும் கொல்கத்தா நகர மக்களை பாதுகாப்பாக இருக்க கேட்டுக் கொண்டுள்ளார்.