மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் விமானத்தில் குடிநீருக்கு பதிலாக ஆசிட் அருந்தி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அது குறித்து மிரள வைக்கும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.
மயங்க் அகர்வால் திரிபுரா மாநிலத்தில் ரஞ்சி ட்ராபி தொடரில் பங்கேற்று விட்டு, அகர்தலாவில் இருந்து சூரத் செல்ல சக வீரர்களுடன் விமானம் ஏறி இருக்கிறார். விமான பயணத்தின் போது தனக்கு முன் இருந்த பையில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து குடிநீர் என நினைத்து அருந்தி இருக்கிறார். ஆனால், குடிநீருக்கு பதிலாக வேறு ஒரு பாட்டிலை அங்கே யாரோ மாற்றி வைத்து இருக்கிறார்கள். அந்த பாட்டிலில் ஆசிட் அல்லது உடலுக்கு பாதகம் விளைவிக்கும் கடுமையான வேதிப் பொருள் இருந்ததாக கூறப்படுகிறது.

அதை ஒரு மடக்கு குடித்த உடன் வாயின் உட்பகுதி எரிந்ததால் மயங்க் அகர்வால் அதை துப்பினார். எனினும், அவர் அதன் பின் வலியில் துடித்து மயக்க நிலைக்கு சென்றதால் உடனடியாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார். அங்கே அவருக்கு ஐசியூவில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மயங்க் அகர்வாலுக்கு தண்ணீருக்கு பதிலாக எப்படி ஆசிட் வழங்கப்பட்டது என்பது குறித்து பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விமானத்தில் குடிநீர் பாட்டில்களை வைக்கும் இடத்தில் யாரோ ஒருவர் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆசிட் பாட்டிலை வைத்துள்ளார். ஒவ்வொரு இருக்கைக்கும் முன்னே இருக்கும் பையில் வாட்டர் பாட்டில் வைக்கப்படும். அதே போல, மயங்க் அகர்வால் அமரும் இருக்கைக்கு முன்பும் வைத்துள்ளனர். ஆனால், அவருக்கு மட்டும் குடிநீருக்கு பதில் வேதிப் பொருள் கலந்த பாட்டில் இருந்துள்ளது. மயங்க் அகர்வால் அது என்ன என்றே தெரியாமல் குடித்து இருக்கிறார். அதன் பின்னரே அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், குறிப்பிட்ட அந்த பாட்டிலை காவல்துறை கைப்பற்றி இருப்பதாகவும், அது எப்படி விமானத்துக்குள் வந்தது, யார் அதை குடிநீர் வைக்கும் இடத்தில் வைத்தது?, மயங்க் அகர்வால் இருக்கைக்கு முன் வைத்தது யார்? என விமான ஊழியர்களிடம் கடும் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.